ஏமனில் 34 அல்-கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
சனா (ஏமன்): ஏமன் நாட்டின் தலைநகர் சனா மற்றும் அப்யான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகள் 34 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அல்-கொய்தா தீவிரவாத நடவடிக்கைகள் ஏமன் நாட்டில் அதிகரித்து வருவதால் அதை சமாளிப்பது குறித்து அரசு தீவிரமாக திட்டமிட்டு வந்தது. அமெரிக்காவுடன் இணைந்து இந்த முயற்சிகளில் ஈடுபடவும் ஏமன் தயாராக இருந்தது.
இதற்கிடையே, ஏமனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு துறையினரின் இலக்குகள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் சனா மற்றும் அப்யான் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய அதிரடி நடவடிக்கையில் 40க்கும் மேற்பட்ட தீவிரவாத கும்பல் சுற்றிவளைக்கப்பட்டது.
இருதரப்பினருக்கும் நடந்த சண்டையில் 34 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஏமன் பாதுக்காப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 17 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட கும்பல் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.