ராஜாவின் முன்ஜாமீனை ரத்து செய்ய சிபிசிஐடி மனு
ஈரோடு: நில அபகரிப்பு மோசடி புகழ் முன்னாள் தி.மு.க அமைச்சர் என்.கே.பி.பி ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ஈரோடு நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்யும்படி கோவை சிபிசிஐடி போலீசார் மனு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சிவபாலன் என்பவர் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் தி.மு.க அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, அவரது மனைவி உமாமகேஸ்வரி, ராஜாவின் உதவியாளர் காஞ்சிக்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தனர்.
ஈரோடு நீதிமன்றத்திலும் என்.கே.கே.பி. ராஜா முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில், பவானிசாகர் எம்.எல்.ஏ சுப்பிரமணியத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி கடந்த செவ்வாய்கிழமை என்.கே.கே.பி ராஜா கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், என்.கே.கே.பி. ராஜாவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ஈரோடு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே பவானிசாகர் எம்.எல்.ஏ.வுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோபி 2வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் என்.கே.கே.பி.ராஜா சார்பில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று மாஜிஸ்திரேட்டு இருதயராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
என்.கே.கே.பி.ராஜா தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார். அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதால் மனு மீதான விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்தி வைப்பட்டது.
இன்று இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு பவானிசாகர் எம்.எல்.ஏ.வை மிரட்டிய வழக்கில் என்.கே.கே.பி.ராஜாவுக்கு நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.