அதிமுக தலைவர்களிடம் சோதனை: விசாரணைக்கு ஆணையம் உத்தரவு
டெல்லி: திருச்செந்தூரில் அதிமுக தலைவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளில் போலீஸார் சோதனையிட்டது குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள திருச்செந்தூரில் அதிமுக பொருளாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தங்கியிருந்த ஹோட்டலில் கடந்த 12ம் தேதி தமிழக போலீஸார் சோதனை நடத்தினர்.
தென்மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதற்கு தேர்தல் ஆணையமோ, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியோ உத்தரவு பிறப்பிக்கவில்லை.
இந் நிலையில் டெல்லியில் வியாழக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை அதிமுக எம்.பி. மைத்ரேயன் சந்தித்து அதிமுக தலைவர்கள் தங்கியிருந்த இடங்களில் சோதனை நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து எந்த அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஐஜி கிருஷ்ணமூர்த்தியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், திருச்செந்தூர் மற்றும் வந்தவாசியில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் மைத்ரேயன் கேட்டுக் கொண்டார்.
சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்
திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தல் சிறப்பு பார்வையாளராக சிவில் சப்ளை கமிஷனர் ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொகுதி சிறப்பு கண்காணி்ப்பாளராக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வீரராகவராவ் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தொகுதி முழுவதும் உள்ள 196 வாக்கு சாவடிகளுமே பதற்றம் நிறைத்தவை என அறிநத தேர்தல் ஆணையம் புதிதாக மேலும் ஓரு சிறப்பு பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரியான தமிழக சிவில் சப்ளை கமிஷனர் ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே கலெக்ராக பணியாற்றியவர்.