இலங்கைக்கான வர்த்தக சலுகைகளை நிறுத்தி வைக்க ஐரோப்பிய யூனியன் முடிவு
கொழும்பு: இலங்கைக்கான முன்னுரிமை வர்த்தக சலுகையை நிறுத்தி வைக்க ஐரோப்பிய கமிஷன் முடிவு செய்துள்ளது.
இங்கை மீதான மனித உரிமை மீறல் குறித்து ஐரோப்பிய யூனியன் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிக் குழுத் தலைவர் பெர்னார்ட் சாவேஜ் கூறுகையில், இன்னும் 2 மாதங்களில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை முறைப்படி அமலுக்கு வரும். அதன் பின்னர் ஆறு மாதங்களுக்கு இது அமலில் இருக்கும்.
இந்த கால கட்டத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும். பிரச்சினைகளை சரி செய்யும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தைகள் அமையும். இது வெற்றி பெற்றால் சலுகைகளை மீண்டும் அமல்படுத்த முடியும் என்றார் பெர்னார்ட்.
கடந்த ஒரு ஆண்டாக இலங்கை மீதான மனித உரிமை மீறல் புகார்கள் குறித்து ஐரோப்பிய யூனியன் விசாரித்து வந்தது. இந்த விசாரணையில், இலங்கை அரசு மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டது உண்மையே என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை பிரகடனங்களுக்குட்பட்ட 3 அம்சங்களின் கீழ் இலங்கை மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாக ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள், சித்திரவதை, சிறார் உரிமைகள் முடக்கப்பட்டது ஆகியவையே அவை.
ஐரோப்பிய தொழில் சந்தையில் பல்வேறு சலுகைகளுடன் கூடிய 16 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகைகள் காரணமாக இலங்கைக்கு ஆண்டுதோரும் 150 மில்லியன் டாலர் லாபம் கிடைத்து வருகிறது. குறிப்பாக இலங்கையின் ஜவுளித்துறைதான் பெரும் லாபத்தை இந்த சலுகையின் மூலம் சம்பாதிக்கிறது. ஐரோப்பாவில் உள்ள சில்லறை வர்த்தகப் பிரிவில் இலங்கை ஜவுளித்துறையினர் பெரும் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு வரியும் கிடையாது.
தற்போதையை தடை காரணமாக இலங்கையின் பொருளாதாரமே கிட்டத்தட்ட ஆடிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜவுளித்துறை பெரும் நலிவைச் சந்திக்கும் அபாயம் எழுந்துள்ளது.