திருச்செந்தூர், வந்தவாசியில் தங்கியுள்ள அமைச்சர்களை ளியேற்ற அதிமுக கோரிக்கை
சென்னை: வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளில் முறைகேடுகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இந்தத் தொகுதிகளில் தங்கியுள்ள அமைச்சர்கள், திமுக முக்கியப் பிரமுகர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை அதிமுக ராஜ்யசபா எம்.பி. டாக்டர் மைத்ரேயன் நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளார்.
அதில்,
திருச்செந்தூர் மற்றும் வந்தவாசியில் வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு, 17-ந் தேதி, மாலைக்கு பிறகு, தொகுதியை சாராத கட்சி பிரமுகர்கள் வெளியேறிவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதை அ.தி.மு.க. பின்பற்றும்.
ஆனால், தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆணையத்தின் உத்தரவை மீற திட்டம் போட்டு வருகிறார்கள்.
தகுந்த ஆவணங்களின்றியும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்றியும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் நள்ளிரவில் சோதனை நடந்தது. இது தொடர்பாக தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.யை இடமாற்றம் செய்து தாங்கள் உத்தரவிட்டதற்கு நன்றி.
கடந்த 15-ந் தேதி, மீண்டும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீது, தி.மு.க.வை சேர்ந்த காணம் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் தாக்குதல் நடந்துள்ளது. மேற்கண்ட சம்பவங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகிறார்கள்.
கள்ள ஓட்டு போடுவதற்காக, கல்யாண மண்டபங்கள், வர்த்தக வளாகங்களில் தங்கியிருக்கும்படி கட்சி தொண்டர்களுக்கு தி.மு.க. அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 17 மற்றும் 18-ந் தேதிகளில் பணம் வினியோகிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அ.தி.மு.க. பிரமுகர்களை, 16-ந் தேதியன்றே தொகுதியில் இருந்து வெளியேற்றுமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பணம் வினியோகத்தை தி.மு.க.வினர் எளிதாக மேற்கொள்ள முடியும். தொகுதியை விட்டு வெளியேறுமாறு போலீஸ் அதிகாரிகளும், அ.தி.மு.க.வினரை மிரட்டி வருகிறார்கள்.
எனவே, வந்தவாசி மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளில் இருக்கும் வெளிநபர்களை, தொகுதியில் இருந்து தேர்தல் கமிஷன் வெளியேற்ற வேண்டும். இரு தொகுதிகளிலும் நியாயமான தேர்தல் நடக்க கூடுதல் துணை ராணுவத்தினரை அனுப்பவேண்டும்.
17-ந் தேதி மாலைக்கு பிறகு, தொகுதிகளுக்குள் தி.மு.க.வினர் நுழைவதை தடுக்க அந்தந்த மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்கவும், தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தொகுதியில் இருந்து வெளியேற்றப்படவும், தேர்தல் ஆணையம் உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.