ஜப்பானில் நிலநடுக்கம்- உஷார் நிலையில் நகரங்கள்
டோக்கியோ: ஜப்பானின் இஸு தீபகற்ப பகுதிக்கு ஆப்பால் பசிபிக் கடலில் 90 கி.மீ தொலைவை மையமாகக் கொண்டு நேற்று காலை 8.44 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவிவியல் ஆய்வு மையத் தகவலின் படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 என பதிவாகியிருந்தது.
இதன் தாக்கம், கிழக்கு இஸு பகுதியில் உள்ள ஈடோ நகரத்தில் அதிகளவில் உணரப்பட்டது. சாலைகள், நடைபாதைகள் மற்றும் கட்டிட சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன.
ஈடோ நகரில் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. 7க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிகிறது. அதற்கு பின்னரும் நேற்று மாலை முதல் இன்று வரை இப்பகுதியில் 100 அதிகமான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
பூகம்பத்துக்கு பிந்தைய அதிர்வுகளால் இதே அளவு அல்லது இதை விட பெரியளவிலான பூகம்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக ஜப்பான் பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்தது.
இதனால், பல இடங்களில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, அதிகாலை 5.41 மணிக்கு டோக்கியோ மற்றும் கன்டோ பகுதியில் 5.3 அளவிலான நிலநடுக்கம் ஜப்பான் பூகம்ப ஆய்வியல் மையத்தில் பதிவானது.