முக்கூடல் தொழிலதிபரை கொல்ல ரூ.1 லட்சம் பேரம்
நெல்லை: தொழிலதிபரை கொல்ல ரவுடியிடம் ரூ.1 லட்சம் பேரம் பேசியவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் மாலிக் முகமது. ஓய்வு பெற்ற துணைவேந்தரான இவரும், இவரது மனைவி ஹஜிதா பீவி மற்றும் காவலாளி ஞானபிரகாசம் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டனர்.
மாலிக் முகமதுவிடம் ஏற்கனவே வேலை பார்த்த நாகர்கோவில் மறவன்குடியிருப்பை சேர்ந்த அன்பரசன் என்பவர் தீபாவளி செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதற்காக தனது நண்பர் கோபு என்பவருடன் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் இருவரையும் கைது செய்தனர். ஜாமீனில் வந்த அன்பரசன் திடீரென தலைமறைவாகிவிட்டார்.
ஆரல்வாய்மொழியில் நடந்த மற்றொரு கொலையிலும் அன்பரசனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் அன்பரசன் மீண்டும் கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியேறினார்.
இந்நிலையில் முக்கூடலை சேர்ந்த தொழிலதிபரை கொலை செய்வதற்காக சிங்கம்பாறையை சேர்ந்த ஜஸ்டின அம்புரோஸ் என்பவருடன் அன்பரசன் ரூ.1 லட்சம் பேரம் பேசியது போலீசாருக்கு தெரிந்தது.
உடனடியாக ஜஸ்டின் அம்புரோசை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அன்பரசனை முக்கூடல் போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.