சங்கரராமன் கொலை வழக்கு-12 சாட்சிகள் பல்டி
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்ட 32 சாட்சிகளில் 12 பேர் தாங்கள் போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.
இதனால் இந்த வழக்கின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பல சாட்சிகளும் இதேபோல பல்டி அடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004 செப்டம்பர் 3ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திர சரஸ்வதிகள் பிரதானமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்துவருகிறது. தற்போது சாட்சிகள் விசாரணை நடக்கிறது. இதுவரை 32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
நீதிபதி கிருஷ்ணராஜா முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் வரவில்லை. ரகு, சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன் உட்பட 12 பேர் ஆஜர் ஆனார்கள்.
தலைமை நீதிபதி முன்பு வக்கீல் குமாஸ்தா தணிகாசலம், இந்து அறநிலையத்துறையின் ஓய்வு பெற்ற துணை ஆணையர் வைத்தியநாதன், கோவில் வழிகாட்டி கோவிந்தன் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
அவர்கள் ஏற்கனவே தாங்கள் போலீசிடம் கொடுத்த சாட்சியத்தின்போது அளித்த வாக்குமூலத்தை மறுத்தனர். போலீசார் மிரட்டியதால் அவ்வாறு வாக்குமூலம் தந்ததாக அவர்கள் கோர்ட்டில் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்ட 32 சாட்சிகளில் 12 பேர் பல்டி அடித்துள்ளனர்.
மேலும் பல சாட்சிகளும் கூட பல்டி அடிப்பார்கள் என்றே தெரிகிறது. எனவே வழக்கு என்னாகுமோ என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications