பொங்கல்: தென் மாவட்டங்களுக்கு ரயில்களில் இடமில்லை
வரும் 22ம் தேதி நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் காத்திருப்போர் பட்டியல் 100 ஆக உள்ளது. 23ம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் முழுவதும் ஏ.சி பெட்டிகள். இந்த ரயிலில் உள்ள 12 பெட்டிகளும் 3 அடுக்கு ஏ.சி வசதி கொண்டது.
சென்ட்ரலில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமை தோறும் இயக்கப்படும் இந்த ரயிலில் 23ம் தேதி பயணம் செய்ய இடம் இல்லாததால் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து வழக்கமாக செல்லும் நெல்லை, பாண்டியன், முத்துநகர், அனந்தபுரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 23, 24 ஆகிய தேதிகளில் காத்திருப்போர் பட்டியல் 300ஐ தாண்டியதால் முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது.
பகல் நேரத்தில் புறப்பட்டு செல்லக்கூடிய வைகை, பல்லவன் ரெயில்களிலும் 22, 23, 24, 25 ஆகிய தேதிகளில் இடமில்லை. குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 23ம் தேதி அன்று காத்திருப்போர் பட்டியல் 200 ஆக உள்ளது.
24, 25 ஆகிய தேதிகளில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு 300க்கும் மேல் காத்திருப்போர் பட்டியல் நீண்டதால் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பி வருவதற்கும் 27, 28 ஆகிய தேதிகளில் அனைத்து ரயில்களிலும் இடம் இல்லை. காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருப்பதால் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
செங்கோட்டை, சென்னை சிறப்பு ரயிலில் 27ம் தேதி அன்று 199 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து ரயில்களும் நிரம்பி வழிகின்றன. காத்திருப்போர் பட்டியல் 300ஐ தாண்டியதால் முன்பதிவு நிறுத்தப்பட்டது.
இதே போல பொங்கல் பண்டிகைக்கான தென் மாவட்ட ரயில்களும் நிரம்பிவிட்டன. ஜனவரி 11ம் தேதி புறப்படும் அனைத்து ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் 100 ஆக உள்ளது. 12, 13 தேதிகளில் எல்லா ரயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டதால் முன்பதிவு மூடப்பட்டுள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி, பாண்டியன் உள்ளிட்ட எல்லா ரயில்களிலும் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை - சென்னை சிறப்பு ரயில் 17ம் தேதி புறப்படுகிறது. அந்த ரயிலில் காத்திருப்போர் எண்ணிக்கை 212 ஆக உள்ளது.
வழக்கமாக செல்லும் ரயில்கள், சிறப்பு ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் தென் மாவட்ட மக்கள் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மேலும் சில சிறப்பு ரயில்களை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.