காங்கிரஸ் எம்பி தலைக்கு ரூ. 50 லட்சம்- தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அறிவிப்பு
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சியின் மண்டல தலைவர் மணிபால் ரெட்டி என்பவர், தெலுங்கானாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் ராஜகோபால் எம்.பியின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.50 லட்சம் பரிசு தருவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், தெலுங்கானா தனி மாநிலத்திற்காக நாங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்திற்கு இப்போது தான் வெற்றி கிடைத்துள்ளது.
இதைத் தடுக்க உண்ணாவிரதம் இருக்கும் எம்.பி. ராஜகோபாலை சும்மா விடமாட்டோம். அவர் தலையை கொண்டு வந்தால் ரூ.50லட்சம் பரிசு தருவோம்.
தெலுங்கானாவுக்கு எதிராக போராடும் அனைவருக்கும் எங்கள் கட்சித் தொண்டர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.
மணிபால் ரெட்டியின் இந்த மிரட்டல் குறித்து மனித உரிமை ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் தந்துள்ளது.
இதையடு்த்து இது குறித்து விசாரித்த உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டங்கள் 10வது நாளாக தொடர்ந்து வருகின்றன.
இதனால் ராயசீமா, கடலோர ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், வக்கீல்கள் போராட்டம் காரணமாக பல இடங்களி்ல் வன்முறை தொடர்ந்து வருகிறது. பஸ், ரயி்ல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களி்ல் 10வது நாளாக பந்த் நடப்பதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலைவாசியும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
திருப்பதி 10வது நாளாக வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வர் உள்ளிட்ட அக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சட்டசபை தீர்மானம் தேவையில்லை-ராவ்:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ்,
புதிதாக ஒரு மாநிலம் உருவாக்க சட்டசபையில் தீர்மானம் எதுவும் கொண்டு வரத் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே தெலுங்கானாவுக்கு ஆந்திரா சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது தேவையில்லை.
அத்தகைய தீர்மானம் கொண்டு வருவது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிப்பது செய்ததுபோல ஆகிவிடும்.
தெலுங்கான விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைந்த ஆந்திரா வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார். அவர் எம்எல்ஏக்கள் தெலுங்கானா கோரி போராட்டம் நடத்துகிறார்கள் என்றார்.
சட்டசபையி்ல் தீர்மானம் கொண்டு வராமல் காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகியவை இழுத்தடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடிகர் சிரஞ்சீவி:
இந் நிலையில் பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி இன்று காலை கார் மூலம் திருப்பதியில் இருந்து சென்னை வந்தார்.
ஒன்றுபட்ட ஆந்திரா என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் அவருக்கு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பின்னர் விமானம் மூலம் அவர் விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றார்.
தெலுங்கானாவுக்கு எதிராக திருச்சியில் போஸ்டர்:
இந் நிலையில் திருச்சியில் ஆங்காங்கே தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசை கண்டித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மக்கள் கலை இலக்கிய மன்றம் சார்பில் பாலக்கரை காஜாமலை ஆகிய பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து பாலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி போஸ்டர் ஒட்டியதாக சேக் பிடார்(26), விஜயசுந்தர் (23), செல்லமுத்து (29) ஆகியோரை கைது செய்தனர்.