காற்றாலை மூலம் 300 மெகாவாட் மின் உற்பத்தி!
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் பருவமழை மற்றும் நல்ல வேகத்தில் அடிக்கும் காற்றும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, தமிழக மின்வாரியத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
மழைக்காலம் என்பதால், தற்போது தமிழகத்தின் மின் தேவையில் 400 மெகாவாட் அளவு குறைந்துள்ளது. இந்த மின் தேவைக் குறைபாடு வரும் ஜனவரி வரை தொடருமாம்.
இன்னொரு பக்கம் காற்று பலமாக அடிப்பதால் காற்றாலைகள் மூலம் 300 மெகாவாட் மின்சக்தி இப்போது உற்பத்தி செய்யப்படுகிறது. எப்போதும் பற்றாக்குறையில் காலம் தள்ளும் மின்துறைக்கு இது பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
இந்த தருணத்தைப் பயன்படுத்தி வரும் 2012-க்குள் 6000 மெகாவாட் உற்பத்தித் திறனை எட்டும் முயற்சியில் உள்ளது தமிழக மின்துறை.
தமிழகத்தின் மின்தேவை கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை 9600 மெகா வாட்டாக இருந்தது. ஆனால் தொடர்ச்சியான பருவமழை காரணமாக அதில் 400 மெவா குறைந்து 9200 மெ வா ஆகியுள்ளது. எப்படியும் வருகிற 2010 பிப்ரவரி வரை இதே நிலை தொடரும் என மின்வாரியம் எதிர்ப்பார்க்கிறது.
விவசாய நடவடிக்கைகளுக்கு இன்னும் சில வாரங்களுக்கு மின்சாரம் தேவைப்படாது என்பதாலும் வீட்டு உபயோகத்துக்கும் அதிக அளவு மினாசாரம் இந்த குளிர்காலத்தில் தேவைப்படாது என்பதாலும், இந்த காலகட்டதித்தில் மின் உற்பத்தியை பெருக்கத் திட்டமிட்டுள்ளது மின் துறை.
தமிழகத்தில் 18,80,450 பம்ப் செட் இணைப்புகளும், 1,36,61,431 வீட்டு உபயோக இணைப்புகளும் உள்ளன. இவை தவிர தொழிற்சாலை இணைப்புகளும் உள்ளன.