ராஜபக்சேவை பாடி மகிழ்வித்த ஆஷா போஸ்லே!

ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி, ஆஷா போஸ்லேவின் தீவிர ரசிகையாம். அவர் பாடிய பழைய பாடல்களின் ரசிகையான இவர் ஆஷாவை இலங்கைக்கு வரவழைத்து நேரில் பாடல்களைப் பாட வைத்து ரசிக்க விரும்பினாராம்.
இதையடுத்து தனது கணவரிடம் சொல்ல அவரும், கொழும்புக்கு நேரில் வந்து பாடி எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.
இதையேற்று ஆஷா போஸ்லே கொழும்பு வந்தார். அதிபர் மாளிகையில், ராஜபக்சே குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார்.
பின்னர் ராஜபக்சே மற்றும் அவரது மனைவியின் விருப்பப் பாடல்களை நேரில் பாடி அவர்களை மகிழ்வித்தாராம்.
ஆஷாவின் பழைய பாடல்களை அவரே நேரில் வந்து பாடியதைக் கேட்டு ராஜபக்சே மகிழ்ச்சியுடன் தலையாட்டி ரசித்தாராம்.
ராஜபக்சே குடும்பத்தினர் மற்றும் முக்கிய விருந்தினர்களின் விருப்பப் பாடல்களையும் ஆஷா பாடி குளிர்வித்தாராம்.
இலங்கை இனப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசு இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு முக்கியஸ்தர்களை இலங்கையில் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த அழைப்பு விடுத்து வந்தது.
குறிப்பாக எம்.எஸ்.சுவாமிநாதன், இன்போசிஸ் நாராயணமூர்த்தி ஆகியோரை இலங்கைக்கு அழைக்க முயற்சித்தது. ஆனால் தமிழகத் தலைவர்கள் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்கள் தங்களது இலங்கை பயணங்களை ரத்து செய்தனர்.
இந்த நிலையில் ஆஷா போன்ஸ்லே கொழும்பு சென்று பாடல் பாடி ராஜபக்சேவையும், அவரது குடும்பத்தினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்களப் பாடல் பாட ஆஷா முடிவு...
இதற்கிடையே, சிங்களப் பாடல் பாடப் போகிறாராம் ஆஷா போன்ஸ்லே.
கொழும்பு பயணத்தின் ஒரு கட்டமாக ஒரு நிகழ்ச்சியில் ஆஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் 18 மொழிகளி்ல் பாடியுள்ளேன். ஆனால் ஏன் சிங்களத்தில் மட்டும் இதுவரை பாடவே இல்லை என்று என்னை நானே கேட்டுக் கொண்டுள்ளேன். தற்போது அந்த வாய்ப்பு வந்துள்ளது.
சிலோன்தான் இந்தியா, இந்தியாதான் சிலோன். நான் இங்கு மீண்டும் மீண்டும் வர விரும்புகிறேன். எனவே என்னை அழைத்துக் கொண்டே இருங்கள் என்றார் ஆஷா.
சிங்களத்தைச் சேர்ந்த இளம் பாடகர்களான பதியா மற்றும் சந்துஷ் ஆகியோருடன் இணைந்து ஆஷா இரு பாடல்களைப் பாடவுள்ளார். அதில் ஒன்று தேதுன்னா சேதி என்ற சிங்களப் பாடல். தேதுன்னா சேதி என்றால் மறைந்து போன வானவில் என்று பொருளாம். இன்னொரு பாடல், அன்பின் நம்பிக்கை என்ற பாடல். இது ஒரு இந்திப் பாடலின் சிங்கள மொழியாக்கமாம்.












Click it and Unblock the Notifications