தைவானில் நிலநடுக்கம்- சுனாமி அபாயம் இல்லை
ஹுவாலீன் (தைவான்): தைவானில் சனிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என பூகம்பவியல் ஆய்வு மையம் இன்று காலை தெளிவுபடுத்தியுள்ளது.
தைவானின் கிழக்கே ஹுவாலீன் நகரின் கடல்பகுதிக்கு அப்பால் 15 மைல் தொலைவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தைவானின் மத்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.8 என பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தைபே பகுதியிலும் வலுவாக உணரப்பட்டது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9 மணியிலிருந்து 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன. தொடர்ந்து கட்டிடங்கள் அதிர்ந்ததால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
சில இடங்களில் கட்டிட சுவர்கள் இடிந்து சிலர் காயமடைந்தனர். பெயரியளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. நிலநடுக்கத்தால் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
முன்னதாக நேற்று நள்ளிரவில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், சுனாமி அபாயம் எதுவும் இல்லை என பூகம்பவியல் ஆய்வு மையம் இன்று காலை தெளிவுபடுத்தியுள்ளது.