மலாவியில் பயங்கர நிலநடுக்கம், 3 பேர் பலி, 200 பேர் படுகாயம்
பிளான்டயர்: தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து 3 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மலாவியின் கரோங்கா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 என பதிவாகியிருந்தது. அதிகாலை 1.19 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.
பல இடங்களிலும் கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி 3 பேர் இறந்துவிட்டதாகவும் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் கரோங்கா மாவட்ட கமிஷனர் காஸ்டன் மஷேகா கூறினார்.
கரோங்கா மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பத்திரமாக இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
'நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளது. வீடுகள் கட்டிடங்களுக்கு அருகில் யாரும் இருக்கவேண்டாம் என சொல்லியிருக்கிறோம். இங்கு உடனடியாக மருத்துவ வசதிகளும், 48 ஆயிரம் 'டென்ட்'களும் தேவைப்படுகிறது' என்றும் மாவட்ட கமிஷனர் தெரிவித்தார்.
இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மிசுசு நகர மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவியாக மலாவி தலைநகர் லிலாங்குவேயில் இருந்து ரெட்கிராஸ் அமைப்பினர் உதவிப் பொருட்களை அனுப்பிவருகின்றனர்.
மமிசுசு நகரத்தில் இருந்து 140 மைல்கள் தொலைவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications