வீட்டுப் பாடம்-ட்யூஷனுக்கு தடை: அமர்த்தியா சென் கோரிக்கை
நோபல்பரிசு பெற்ற இந்திய பொருளாதார மேதை அமர்தியாசென் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்தியாவின் கல்வி முறை இன்று முற்றிலும் நெருக்கடியான சூழலில் உள்ளது. குறிப்பாக பாடச் சுமைகள் குழந்தைகளின் மூளையை மழுங்கடிப்பதாக உள்ளன.
பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு திரும்பியதும் படிப்பு, வீட்டுப்பாடம் என பெற்றோர் படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள்.
பகல் முழுக்க பள்ளியில் இருக்கும் மாணவர்கள், மாலையில் வீட்டில் விளையாட்டு, பொழுது போக்கு என இயல்பாக இருக்க விட வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் சமமான வளர்ச்சிகளை பெறுவார்கள்.
ஆனால் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம், டியூஷன் என அதிக சுமையை கொடுத்து மற்ற பணிகளை செய்ய விடாமல் தடுத்து விடுகின்றனர்.
மாணவர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டுப் பாடம் தொடர்பாக கல்வி திட்டத்தில் எந்த விதிமுறைகளும் விதிக்க வில்லை. இந்த வீட்டுப் பாடம் மாணவர்களின் கல்வியில் எந்த முன்னேற்றமும் வரவதில்லை.
பெரும்பாலான பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் பாடம் தொடர்பாக கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் சொல்ல தெரியாததாலேயே டியூசனுக்கு அனுப்புகிறார்கள். இன்னும் சிலர் தொந்தரவு தாங்காமல் துரத்திவிடுகிறார்கள்.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதி பாடத்தை வீட்டில் இருந்தபடி கற்கும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
வீட்டு சூழ்நிலைக்கு தகுந்த மாதிரிதான் அவர்கள் பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். எனவே அனைத்து மாணவர்களுக்கும் சம அளவில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.
எனவே வீட்டுப்பாடம் டியூசன் போன்றவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் சரியான கொள்கைகள், சட்ட திட்டங்களை கல்வித்துறை உருவாக்க வேண்டும்..." என்றார்.