மும்பை சாக்கடைக் குழியில் விழுந்த சிறுவன்- மீட்பு முயற்சிகள் தீவிரம்!
மும்பை: மும்பையில், 3 வயது சிறுவன் சாக்கடைக் குழியில் விழுந்து விட்டான். அவனைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சிறுவனின் உயிர் குறித்து பெரும் கவலை அலைகள் பரவியுள்ளன.
அந்த சிறுவனின் பெயர் அயூப். 3 வயதாகிறது. நேற்று இரவு எட்டரை மணியளவில் தனது வீட்டுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திறந்து கிடந்த பாதாளச் சாக்கடைக்குள் விழுந்து விட்டான்.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முடியவில்லை.
தொடர்ந்து மீட்பு முயற்சிகள் தொடருகின்றன. இந்த நிலையில் அயூப்புக்கு என்னாகுமோ என்ற பயத்தில் அவனுடைய தாத்தா இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மரணமடைந்தார். அவனுடைய பாட்டிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சோகத்தால் மும்பையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்த பாதாளச் சாக்கடை கடந்த ஐந்து மாதங்களாகவே திறந்து கிடந்ததாம். பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
சிறுவனின் தாயார் கூறுகையில், விளையாடிக் கொண்டிருந்தபோது ஓடினான். அப்போது கால் தடுமாறி சாக்கடைக் குழியில் விழுந்து விட்டான். உடனே போலீஸ் மற்றும் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் உடனடியாக வரவில்லை.
எனது மகனுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதற்கு முன்பு ஒரு திருடனும், குடிகாரனும் உள்ளே விழுந்தனர். அவர்களையெல்லாம் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் மீட்டுக் கொடுத்தனர். ஆனால் எனது மகனைப் பற்றி யாருமே கவலைப்படவில்லையே என்று அழுது புலம்பினார்.












Click it and Unblock the Notifications