For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை தாக்குதல் - ராம் பிரதான் கமிட்டி அறிக்கை தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

நாக்பூர்: மும்பையில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ராம் பிரதான் கமிட்டியின் அறிக்கை இன்று மகாராஷ்டிர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

மும்பைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் நிகழ்ந்த தவறுகள் குறித்து ஆராய ராம் பிரதான் தலைமையில் ஒரு கமிட்டியை மகாராஷ்டிர அரசு அமைத்தது.

இந்த கமிட்டி போலீஸ் தரப்பில் நடந்த குளறுபடிகள் குறித்து விரிவாக ஆராய்ந்தது. இந்த அறிக்கை ஆறு மாதத்திற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட வேண்டியது.

ஆனால் அதில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றிபப்பதால் அதை பகிரங்கப்படுத்த முடியாது என மகாராஷ்டிர அரசு கூறி விட்டது. அதேசமயம், நடவடிக்கை அறிக்கையை மட்டும் அது சட்டசபையில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், தற்போது மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கு முடிவுறும் தருவாயை எட்டியுள்ள நிலையில், ராம் பிரதான் கமிட்டி அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது.

அதன்படி நாக்பூரில் இன்று நடந்த குளிர்கால கூட்டத் தொடரின்போது, ராம் பிரதான் கமிட்டி அறிக்கையை மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தாக்கல் செய்தார்.

முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட நடவடிக்கை அறிக்கையில், மும்பை போலீஸ் கமிஷனர் ஹசன் கபூர் மும்பை தாக்குதல் சம்பவத்தின்போது தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியிருக்க வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் அவரே தலைமையேற்று நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்குப்பதிலாக டிரைடென்ட் ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டு உத்தரவுகளை மட்டும் பிறப்பித்தார்.

தீவிரவாத தாக்குதல்களின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை நடவடிக்கை முறைகளைக் கூட அவர் பின்பற்றவில்லை. மாறாக, அதற்கு நேர் மாறான நடவடிக்கைகளிலேயே அவர் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

போலீஸ் தரப்பில் இந்த பெரிய குறையை சுட்டிக் காட்டிய அறிக்கை, டிஜிபி ஏ.என்.ராய் மற்றும் இணை கமிஷனர் ராகேஷ் மரியா ஆகியோரைப் பாராட்டியிருந்தது. மேலும் மும்பை போலீஸாரிடம் அதி நவீன ஆயுதங்கள் இல்லாத பெரும் குறையும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அடுத்த வாரத்திலேயே கபூர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று ராம் பிரதான் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இவ்வாறு பதிலளித்தார். மேலும் ஹேமந்த் கர்கரேவின் காணாமல் போன புல்லட் புரூப் ஜாக்கெட் குறித்து கேட்ட கேள்விக்கு, இதுதொடர்பான கோப்புகளை பராமரித்து வந்த 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, கர்கரேவின் புல்லட் புரூப் ஜாக்கெட்டை திருடியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

காவல்துறையினரையும் தண்டியுங்கள் - தேஷ்முக்

முன்னதாக மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து எங்களை மட்டும் தண்டித்தது நியாயமல்ல. தவறு செய்த காவல்துறையினரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அரசியல்வாதிகளை மட்டும் தண்டிப்பது சரியாக இருக்காது. அரசியல்வாதிகளின் பங்கு குறித்து முறையாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை. ராஜினாமா செய்து விட்டதால் மட்டும் அவர்கள் குற்றவாளிகளாகி விட முடியாது. போலீஸார் மீதும் தவறுகள் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்..

பாஜக செய்தித் தொடர்பாளர் பல்பீர் புஞ்ச் கூறுகையில், இரு பக்கங்களிலும் தவறுகள் இருந்தன. போலீஸ் அதிகாரிகள் இந்த குற்றத்திலிருந்து தப்ப முடியாது. அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X