லோக்சபா பாஜக துணைத் தலைவராக கோபிநாத் முண்டே நியமனம்
டெல்லி: முன்னாள் மகாராஷ்டிர துணை முதல்வர் கோபிநாத் முண்டே, லோக்சபா பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் கத்காரியுடன், மகாராஷ்டிர அரசியலில் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தவர் கோபிநாத் முண்டே.
மறைந்த பிரமோத் மகாஜனின் மைத்துனர்தான் முண்டே. தனது மைத்துனரை பிரமோத் மகாஜன் தொடர்ந்து முன்னிறுத்தி வளர்த்து வந்ததை பகிரங்கமாக எதிர்த்து முதன் முதலில் குரல் கொடுத்தவர் கத்காரி. இதையடுத்துதான் அவர் மகாராஷ்டிர பாஜகவில் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் தற்போது கத்காரி பாஜக தலைவராகி விட்ட நிலையில், கோபிநாத் முண்டே லோக்சபா பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது கத்காரி நியமனத்தால் சோர்வடைந்துள்ள முண்டேவை சமாதானப்படுத்தும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
மரத்வாடா பகுதியைச் சேர்ந்த பீத் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முண்டே. 1995 - 99ம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி அமைந்திருந்தபோது துணை முதல்வராக இருந்துள்ளார்.
லோக்சபா துணைத் தலைவர் பதவியில் ஏற்கனவே இருந்தவர் சுஷ்மா சுவராஜ். தற்போது அவர் தலைவராகி விட்டதால், அந்த இடத்தைப் பிடிக்க பெரும் அடிதடியே நடந்து வந்தது. அனந்தகுமாரின் பெயர் இதில் முன்னணியில் இருந்தது. இந்த நிலையில் தற்போது முண்டே அப்பதவிக்கு வந்துள்ளார்.
நிதின் கத்காரி பாஜக தலைவரான பின்னர் நடந்துள்ள முதல் முக்கிய பாஜக நிர்வாகி நியமனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications