தேர்தலில் வெல்ல பிரபாகரனின் பெற்றோர் ஆதரவு தேவையில்லை - ராஜபக்சே
கொழும்பு: அதிபர் தேர்தலில் வெற்றி பெற பிறரைப் போல நான் பிரபாகரனின் பெற்றோரின் ஆதரவையெல்லாம் கோர மாட்டேன் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
ராஜபக்சே தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
இதேபோல பொன்சேகாவும் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
பொன்சேகா தனது பிரசாரத்தின்போது, அனைத்து தரப்பினரின் ஆதரவை பெறுவதற்கு முயற்சிக்கிறேன். அவசியம் என்றால், தற்போது வன்னியில் அகதிகள் முகாமில் உள்ள பிரபாகரனின் பெற்றோர் ஆதரவையும் பெறுவதற்கு தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் ராஜபக்சே தனது பிரசாரத்தின்போது, இலங்கையில், வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள வங்கிகளிடம் இருந்தும் கடன் பெறுவேன். எந்த காரணத்தைக் கொண்டும், பிரபாகரன் பெற்றோரிடம் இருந்து, ஒரு பைசா கூட பெற மாட்டேன். அவர்களின் ஆதரவை பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
ஜனவரி 27ல் இருந்து வளர்ச்சி திட்டங்களை முழுவீச்சில் மேற்கொள்வேன். எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கைக்கு நிதி உதவி அளிக்க வேண்டாம் என்று உலக நாடுகளிடம் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், அவரால் நிதியுதவியை தடுக்க முடியவில்லை. இலங்கையின் வளர்ச்சிக்காக எந்த ஒரு நாட்டிடம் இருந்தும் உதவி பெற தயார். அதற்காக, அவர்கள் நிபந்தனை விதித்தால் அதை ஏற்க மாட்டேன் என்றார் ராஜபக்சே.