அரசியல் பேரமா?-கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் பதிலடி

கடந்த 2009ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை எம்.பியாக மு.க.அழகிரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் மோகன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அவர் மறைந்ததை அடுத்து, அவ்வழக்கின் வாதியாக வேறு ஒருவரை மார்க்சிஸ்ட் கட்சி இணைத்து வழக்கு தொடந்து நடக்கும் என்றும் அறிவி்த்தது.
இதைத்தொடர்ந்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'நம்முடன் தோழர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக அனுசரணையோடு நடந்து கொள்கிறது. ஆனால் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் தோழர்களே புரிந்து கொள்ளுங்கள்' என்று அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை எனக் கூறியதும் உடனடியாக நடவடிக்கை எடுத்தேன். ராஜ்யசபா தேர்தலில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் டி.கே.ரங்கராஜனை ஆதரித்தோம் என்றெல்லாம் கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால், அரசியல் என்பது எங்களை பொருத்தவரை பேரம் பேசும் இடமல்ல என மார்க்சிஸ்ட் கட்சி கருணாநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில்,
சாதாரண ஜனநாயக நடைமுறையான பேரணிக்கு அனுமதி வழங்குவதுகூட பெருந்தன்மையின் அடையாளம் என்று முதல்வர் கருதுவது வினோதமாக உள்ளது.
தேர்தல்களில் தோழமைக் கட்சிகளுக்குள் விட்டுக்கொடுத்து போட்டியிடுவது, ஒரு கட்சி இன்னொரு கட்சிக்கு அளிக்கக் கூடிய சலுகை அல்ல. பரஸ்பர ஒத்துழைப்பு மட்டுமே.
திமுக ஆதரவோடு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதாலேயே திமுக தலைமையிலான அரசின் தவறான அணுகுமுறையை கண்டிக்கக் கூடாது, விமர்சிக்கக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறையல்ல.
மதுரை தேர்தலில் நடைபெற்ற வன்முறைகள், பண விநியோகம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மோகன் நீதிமன்றம் சென்றார். அவர் மறைவுற்றதைத் தொடர்ந்து இந்த வழக்கை தொடர்ந்து நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
ஒரு பேரணிக்கு அனுமதி வழங்கியதற்காக, இந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்க வேண்டும் என்று முதல்வர் கருதுகிறார் போலிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை அரசியல் என்பது பேரம் பேசுகிற இடம் இல்ல. அது, ஒரு வர்க்கப் போராட்ட களம். மக்களுக்கான போராட்ட பாதை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications