தமிழகத்தில் இன்றும் கன மழை பெய்யும்

வங்கக் கடலில் உருவான வார்டு புயல் போய் விட்டது. இருப்பினும் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி அப்படியே நிலை கொண்டுள்ளது.
இதனால் நேற்று இரவிலும் இன்று அதிகாலையிலும் கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்தது. காவிரி டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை பெய்தது. அதிகாலையில் பலத்த மழை பெய்தது.
இந்த நிலை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இன்று மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசாக மழை பெய்யும்.
கன்னியாகுமரியில் சூறாவளி:
இதற்கிடையே, கன்னியாகுமரியில் நேற்று கடுமையான சூறாவளி காற்று வீசியதால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடல் பெரும் சீற்றத்துடன் காணப்பட்டது. 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வந்து இருந்தனர்.
அனைவரும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு குழாம் முன் குவிந்து இருந்தனர். ஆனால் கடுமையான சூறாவளி காற்று காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக காலை 8 மணிக்கு அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications