தெலுங்கானாவுக்கு ரோஜா கடும் எதிர்ப்பு

ஐக்கிய ஆந்திராவுக்கு ஆதரவாகப் போராடி வரும் மாணவர்கள், கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்.
அனந்த்பூர் மாவட்டத்தில் தெலுங்கானாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சுனிதா, ரகுநாத ரெட்டி, பாரத்தசாரதி ஆகியோரை சந்திக்க ரோஜா நிருபர்களிடம் பேசுகையில்,
தெலுங்கானா கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் பதவி ஆசை பிடித்தவர். பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையில் மாநிலத்தையே பிரிக்கத் துடிக்கிறார்.
அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீரிழிவு நோயாளியால் உண்ணாவிரதம் இருக்க முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் சந்திரசேகர ராவ் 11 நாள் உண்ணாவிரதம் இருந்தாக சொல்கிறார்கள். ஆனால், உண்ணாவிரதம் முடித்த மறுநாள் நன்றாக எழுந்து வீட்டுக்கு சென்று விட்டார். இதன் மூலம் அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
உண்ணாவிரதம் இருப்பதாக நாடகமாடி உண்ணாவிரதப் போராட்டத்தையே கேவலப்படுத்திவிட்டார்.
நான் 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சந்திரசேகர ராவ் ஒரு அரசியல் கோமாளி என்று கூறினேன். அது தற்போது உண்மையாகிவிட்டது.
தெலுங்கானா அவரது குடும்ப சொத்தா?. அவருக்கு ஆந்திர மக்கள் சரியான நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்றார்.
தெலுங்கு தேசத்தில் இருந்து விலகிவிட்ட ரோஜா காங்கிரசில் இணைய முயன்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிரஞ்சீவி கைது:
இந் நிலையில் தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய பிரச்சாரப் பயணம் நடத்தி வரும் பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி, விஜயவாடா நகரில் தடையை மீறி அவர் ஊர்வலம் செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டார்.
அங்கு போலீஸ் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தொண்டர்களுடன் பேரணி செல்ல முயன்ற அவர் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய அவர்,
ஆந்திராவை பிரித்தால் மாநிலத்தின் நலன் கடுமையாக பாதிக்கப்படும். ஆந்திரா ஒற்றுமையாக இருப்பதுதான் நல்லது. தெலுங்கானா பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் ஐக்கிய ஆந்திராவைத்தான் விரும்புகிறார்கள்.
நான் இக்கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications