'இலங்கை பொருட்கள் புறக்கணிப்போம்'-சென்னையில் பிரச்சாரம்!
சென்னை: மனிதத் தன்மையை காலில் போட்டு நசுக்கிவிட்டு, ஒட்டுமொத்தமாக தமிழினத்தை நசுக்கி அழித்து வரும் இலங்கை அரசின் தயாரிப்புகளை முற்றாகப் புறக்கணிப்போம், என சேவ் தமிழ் (Save Tamil) எனும் அமைப்பு சென்னையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மாநகரின் பெரு வர்த்தக மையங்களான ஸ்பென்ஸர் போன்ற கடைகளுக்கு தங்களின் இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை பல இளைஞர்கள் மேற்கொண்டனர்.
இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த போராட்டம், இப்போதுதான் முதல்முறையாக சென்னையில் தொடங்கியுள்ளது.
இந்த பிரச்சாரப் போரின் போது, மக்களிடம் தங்கள் நோக்கங்களை துண்டுப் பிரசுரங்களாகக் கொடுத்தனர் சேவ் தமிழ் அமைப்பினர்.
இந்தப் பிரசுரங்களில் இவ்வாறு அச்சடிக்கப்பட்டுள்ளது:
"அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா ஆகிய நாடுகளில் தொடங்கப்படவுள்ள இலங்கைப் பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளுக்கு நிம்மதியும், நீதியும் கிடைக்க வேண்டுமென்ற உங்கள் வேட்கை அசைக்க முடியாத உறுதி பெற வேண்டும்.
இனவொழிப்புக் குருதியில் ஊறிய இலங்கைப் பொருட்களை மக்கள் வாங்கக் கூடாது. ஒரு பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதைத் தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள்.
இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் இலங்கையை மண்டியிடச் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
ஈழத் தமிழர்களின் மரியாதைக்காக போராட நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். ஆயுதப்போர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக அரசியல் களத்தில் நடத்தப்பட்டு வரும் போரில் வென்றாக வேண்டும்.
கண்டனத்திற்குரிய இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கை அரசை மண்டியிடச் செய்ய வேண்டும்.
இலங்கை அரசின் தலைவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டு தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களுக்காக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
இலங்கப் பொருட்களை தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள். இந்த அழைப்பை ஏற்று செயலில் இறங்குங்கள். ஆயிரக்கணக்கானோர் ஆதரவளித்து இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இந்த புறக்கணிப்பில் எங்களோடு சேர்ந்து ஒன்றுபடுவதன் மூலம், அனைத்துத் தடைகளையும் மீறி வெல்வோம.." என அந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.