தமிழகம்-புதுவை பஸ்களுக்கு இனி ஒருமுனை வரிதான்!
அதற்கான துணை ஒப்பந்தத்தை இரு மாநில அரசுகளும் தங்கள் அரசிதழ்களில் (கெஜட்) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளன.
தற்போது புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பஸ் புதுச்சேரியிலும் சாலை வரி உள்ளிட்ட பல வரிகளைச் செலுத்த வேண்டும். தமிழகத்திலும் செலுத்த வேண்டும். அதே போன்று தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் பஸ் தமிழகத்திலும் வரி செலுத்த வேண்டும். புதுச்சேரியிலும் வரி கட்டியாக வேண்டும். இதுதான் இரு முனை வரி.
இந்த வரிவிதிப்பு முறை 10 ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருந்து வருகிறது. இதை நீக்கி ஒருமுனை வரி விதிப்பில் கொண்டு வரும் வகையில் ஒரு துணை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இனி புதுச்சேரி பஸ்கள் புதுச்சேரியிலும், தமிழக பஸ்கள் தமிழகத்திலும் வரி கட்டினால் போதும்.
தனியார் பஸ்களும் இதில் அடங்கும்.
தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களுக்கும் இந்த ஒருமுனை வரி பொருந்தும்.
இந்த ஒருமுனை வரிவிதிப்புக் காரணமாக புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு ஓர் ஆண்டுக்கு இனிமேல் ரூ.45 லட்சம் செலவு மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.
தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கும் கிட்டத்தட்ட ரூ.1.5 கோடி மிச்சப்படும் என்கிறார்கள் போக்குவரத்துத் துறை அலுவலர்கள். சரக்குப் போக்குவரத்து, டாக்ஸி உள்ளிட்டவைகளுக்கும் இந்த ஒப்பந்தம் மூலம் சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது.