தமிழக போலீசின் உதவியை நாடும் திகார் ஜெயில் நிர்வாகம்
டெல்லி: மிக முக்கிய குற்றவாளிகள் முதல் அபாயகரமான பயங்கரவாதிகள் வரை அடைக்கப்பட்டுள்ள திகார் ஜெயிலில் காலியாக உள்ள பாதுகாப்பு பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் உதவியை திகார் நி்ர்வாகம் நாடியுள்ளது.
முன்னாள் அமைச்சர் சிபுசோரன், ஆர்.ஜே.டி எம்.பி பப்பு யாதவ் போன்ற அரசியல் குற்றவாளிகள் மட்டுமின்றி ஜெஸிக்கா லால் கொலை வழக்கு முதல் 2001ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பாக பிடிபட்ட அப்சல் குரு, 2000ல் செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானி முகமது ஆரிஃப் வரை ஏராளமான விவிஐபி கைதிகளைக் கொண்டது திகார் ஜெயில்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலையாக இது கருதப்படுகிறது. இங்கு மொத்தமுள்ள 10 பிரிவுகளில் சுமார் 12 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அபாயகரமான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலையில் வார்டன்கள் மற்றும் பாதுகாவலர்கள் பற்றாக்குறை கடந்த ஓராண்டு காலமாக நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் இருந்து காவலர்களை அழைக்க திகார் ஜெயில் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'திகார் ஜெயிலில் வார்டன், தலைமை வார்டன், துணை கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கு தேவை இருப்பது உண்மைதான். மொத்தமுள்ள 1,100 பணியிடங்களில் சுமார் 330 இடங்கள் காலியாக உள்ளன.
ஒரு வருடமாக இந்த நிலை நீடிக்கிறது. தற்போதைக்கு நாங்களே கூடுதல் வேலைகளை பகிர்ந்து சமாளித்து வருகிறோம். ஆனால், இது நீண்ட நாளைக்கு முடியாது' என திகார் ஜெயிலின் டைரக்டர் ஜெனரல் பி.கே.குப்தா கூறியுள்ளார்.
தமிழக போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் பாதுகாவலர்களை அனுப்பக் கோரி திகார் நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே திகார் சிறையின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் தமிழக சிறப்புப் போலீஸார்தான் பல வருடங்களாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், திகார் சிறையின் முக்கியப் பாதுகாப்புப் பணிகளில் தமிழக சிறப்புப் போலீஸார்தான் ஈடுபடுத்தப்படுவது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.