மகள் உடலில் ஆவி புகுந்ததாக கூறி நஷ்ட ஈடு கேட்டவருக்கு உருட்டுக் கட்டை அடி
கடையநல்லூர்: பக்கத்து வீட்டில் இறந்தவரின் ஆவி தனது மகளின் உடலில் புகுந்ததாகக் கூறி, அதை விரட்ட பூஜைக்கு பணம் கேட்டவரை உருட்டுக்கட்டையால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடையநல்லூரை அடுத்த மேலக்கடையநல்லூரை சேர்ந்தவர் மாரிக்கண்ணன். இவரது மகள் பெரியநாயகி (10). இவருக்கு அடிக்கடி காய்ச்சல், தலைவலி, மயக்கம் ஏற்பட்டது. அடிக்கடி நள்ளிரவில் எழுந்து ஆட்டம் போட்டதாகவும் கூறப்படுகிறது.
பெரியநாயகிக்கு பேய் பிடித்திருப்பதாக சிலர் கூறியதை நம்பி மாரிக்கண்ணன் தனது மகள் பெரிய நாயகியை ஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்றார்.
'உங்கள் வீட்டுக்கு அருகே யாரும் தற்கொலை செய்து கொண்டார்களா' என சாமியார் விசாரித்துள்ளார். பக்கத்து வீட்டில் பேச்சியப்பன் என்பவரது மகள் செல்வி ஓன்றரை வருடங்களுக்கு முன் இறந்ததாக கூறினார்.
உடனே அந்த சாமியார் அந்த பெண்ணின் ஆவி தான் பெரியநாயகியின் உடலுக்குள் புகுந்துள்ளது. இதை சரிசெய்ய பூஜைகள் செய்ய வேண்டும. நிறைய செலவாகும் எனக் கூறியுள்ளார்.
இதனால் மாரிக்கண்ணன், செல்வி வீட்டினரை அணுகி, பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வியின் அண்ணன்கள் மணிகண்டன், சிவசந்திரன் ஆகிய 2 பேரும் மாரிக்கண்ணனை உருட்டுக்கட்டையால் சராமரியாக தாக்கினர்.
பலத்த காயமடைந்த மாரிக்கண்ணன் சிகிச்சைக்காக மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டார். மணிகண்டன், சிவசந்திரனை கைது செய்த கடையநல்லூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.