திருச்செந்தூர், வந்தவாசி: அதிகம் வாக்களித்தவர்கள் பெண்களே
சென்னை: நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர்.
திருச்செந்தூர் தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 150 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 953 பேர் தங்கள் வாக்கை பதிவு செய்து உள்ளனர். இது 79.17 சதவீதம் ஆகும்.
51 ஆயிரத்து 353 ஆண்களும், 59 ஆயிரத்து 600 பெண்களும் ஓட்டுப்போட்டு இருக்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களித்து உள்ளனர்.
வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 210 ஆகும். இவர்களில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 758 வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இது 83.9 சதவீதம் ஆகும்.
ஓட்டுப்போட்டவர்களில் ஆண்கள் 63 ஆயிரத்து 779 பேர் ஆகும். பெண்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 979 ஆகும். ஆண்களை விட பெண்கள் கூடுதலாக 5 ஆயிரத்து 200 பேர் வாக்களித்து உள்ளனர்.
23ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு அந்த அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
அந்த அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.