நாளை இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தல் முன்னணி நிலவரத்தை உங்கள் தட்ஸ்தமிழ் உடனுக்குடன் லைவ் செய்யவுள்ளது.
கடந்த 19ம் தேதி வந்தவாசி (தனி) மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்தது.
இரண்டே தொகுதிகள் என்பதாலும், மின்னணு வாக்குப் பதிவு என்பதாலும், நாளை முற்பகலுக்குள் முடிவுகள் தெரிந்து விட வாய்ப்புள்ளது.
திருச்செந்தூர் தொகுதியில், 79.17 சதவீத வாக்குப் பதிவும், வந்தவாசியில் உயர்ந்த அளவாக 83.91 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
வாக்குப் பதிவுக்குப் பின்னர் இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஸ்டிராங் ரூமில் மிக பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்குகிறது.
திருச்செந்தூர் தொகுதி வாக்குகள் ஆதித்தனார் கல்லூரியிலும், வந்தவாசி தொகுதி வாக்குகள், அண்ணா கலைக் கல்லூரி வளாகத்திலும் எண்ணப்படுகின்றன.
இரு மையங்களிலும் தலா 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேசையிலும் ஒரு ஓட்டு எண்ணும் அலுவலர், உதவியாளர், பார்வையாளராக ஒரு மத்திய அரசு ஊழியர் நியமிக்கப்படுவார்கள்.
வந்தவாசியில் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியிருப்பதால் அங்கு 16 சுற்றுக்கள் வரை வாக்குகள் எண்ணப்படும். திருச்செந்தூரில் 14 சுற்று எண்ணப்படும். திருச்செந்தூர் முடிவு முதலில் தெரிய வரும்.
வாக்குப்பதிவின் போது மையங்களுக்குள் இருக்க விரும்பும் அரசியல் கட்சி ஏஜெண்டுகள் காலை 7 மணிக்கே வாக்கு எண்ணும் இடத்திற்கு வந்து விட வேண்டும் என்றும், அதற்கான அத்தாட்சி சான்றிதழ்களை அவர்கள் கொண்டு வர வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
காலை பத்து மணி முதல் முன்னணி நிலவரங்கள் தெரிய ஆரம்பிக்கும். 2 மணி நேரத்தில் முடிவும் தெரிந்து விடும் எனத் தெரிகிறது.
வாக்கு எண்ணிக்கை, முன்னணி நிலவரம் தட்ஸ்தமிழில் உடனுக்குடன் 'லைவ்' செய்யப்படும்.