அமைச்சர் கோ.சி.மணி மருத்துவமனையில் அனுமதி
சென்னை: கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு கோ.சி.மணி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
80 வயதைக் கடந்துள்ள கோ.சி.மணி தஞ்சைப் பகுதியில் சின்னக் கலைஞர் என செல்லமாக அழைக்கப்படுபவர். தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இணையான அனுபவமும், நெருக்கமும் கொண்டவராக அறியப்படுபவர்.
கடந்த 1949ம் ஆண்டு முதலே தி.மு.க.வில் இருந்துவரும் கோ.சி.மணி, தஞ்சை மாவட்டத்தில் மன்னை நாராயணசாமிக்கு பின்னர், தனக்கென தனிப்பெரும் செல்வாக்கை வளர்த்து தி.மு.க.வை கட்டுப்கோப்பாக வைத்திருந்தவர்.
தற்போது அமைச்சர் பொறுப்பில் இருந்தாலும், தி.மு.க.வில் ஏற்பட்டு வரும் சமீபத்திய அதிகார மாற்றங்களால் இவர் ஒரங்கட்டப்பட்டு வருவதாக விமர்சனங்கள் உண்டு. இவரது மகன் கோ.சி.மதியழகன் சமீபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.