தமிழக பஸ் எரிப்பைத் திட்டமிட்டவர் மதானி மனைவிதான்- போலீஸ்
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் மதானி. அவரை விடுவிக்க கேரளத் தரப்பிலிருந்து கடும் நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டன. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மதானி கோவை சிறையில் இருந்த காலத்தில் அவரது மனைவி சுபியா அடிக்கடி கோவைக்கு வந்து பெரும் ரகளையில் ஈடுபட்டு வந்தார். சிறைக்கு ஒருமுறை சென்றபோது சிறை அதிகாரிகள் மீது செல்போனை தூக்கி வீசி எறிந்து ரகளை செய்தார்.
இந்த நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு கேரளாவுக்குச் சென்ற தமிழக பேருந்து ஒன்றுக்கு மதானி கட்சியினர் தீவைத்து எரித்தனர். மதானியின் காவலை நீட்டிக்க தமிழக நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்நிலையில் இந்தியா- வங்க தேச எல்லையில் கடந்த 2-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் நசீர் என்ற மலையாளி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பஸ் எரிப்பில் சுபியா மதானிக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சுபியாதான் பஸ் எரிப்பு சதித் திட்டத்தை தீட்டியவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சுபியா இந்த வழக்கில் 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து சுபியா கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பஸ் எரிப்பில் அவரே முக்கிய சதிகாரர் என்று போலீஸார் கேரள உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் சுபியாதான் முக்கியக் குற்றவாளி, அவர்தான் சதித் திட்டம் தீட்டியவர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.