வாக்களிப்பதை கட்டாயமாக்குவது சரிவராது- குஜராத் சட்டத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
டெல்லி: நாடு முழுவதும் வாக்களிப்பதை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.
நாட்டிலேயே முதல் முறையாக வாக்களிப்பதை கட்டாயமாக்கி குஜராத் மாநில அரசு கடந்த சனிக்கிழமை ஒரு சட்டம் இயற்றியது. அதன்படி குஜராத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களில் தகுதி பெற்ற வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
இந்த சட்டம் நாடு முழுவதும் விவாதங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி கருத்து தெரிவிக்கையில், இதுபோன்ற திட்டங்கள், யோசனைகள் ஏற்கனவே பலமுறை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை இது சற்று சிக்கலான ஒன்றாகும்.
நாம் ஜனநாயகம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது கூடவே வலியுறுத்தலையும், கட்டாயத்தையும் உடன் எடுத்துச் செல்வது இயலாத காரியமாகும்.
இந்தியாவில் உள்ள வாக்காளர்களில் 40 சதவீதம் பேர் பொதுவாக வாக்களிப்பதில்லை. இது நிச்சயம் கவலைக்குரிய ஒன்றுதான்.
இருப்பினும் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது இயலாத காரியம். அது நடைமுறைக்கு சாத்தியமில்லாததாகும். அதற்குப் பதில், வாக்காளர்கள் மத்தியில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும், அது அவர்களது ஜனநாயகக் கடமை என்பதையும் எடுத்துரைக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இதுபோன்ற பணியில் கல்லூரி, பள்ளி மாணவர்களை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தி வருகிறது என்றார்.