மத்திய அமைச்சரவையில் ராகுல்- பிரதமர் விருப்பம்
டெல்லியில் சிஎன்என்-ஐபிஎன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்தாண்டின் சிறந்த அரசியல்வாதியாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி அறிவிக்கப்பட்டார். உ.பி.யில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு சென்றதால், விருதை வாங்க ராகுல் வரவில்லை.
விழாவில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ராகுல் அமைச்சரவையில் சேருவது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன்,
'ராகுல் காந்தியை அமைச்சரவையில் சேர்க்க பல முறை முயற்சிகள் செய்தேன். ஆனால் அவை நிறைவேறவில்லை. கட்சிப் பணிகளை காரணம் காட்டி அவர் எங்கள் கோரிக்கைகளை நிராகரித்து வருகிறார்.
ராகுல் அமைச்சரவையில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். ராகுல் காந்தியிடம் நாங்கள் என்ன எதிர்பார்த்தோமோ அதை மி்ஞ்சும் வகையில் அவர் செயல்படுகிறார். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக அவர் செயல்படுவார்' என்றார்.
மற்றொரு கேள்விக்கு பிரதமர் பதில் அளிக்கையில், 'உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில் இந்தியா அதன் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொணடது' என குறிப்பிட்டார்.
இதுபோன்ற சமயத்தில் பொருளாதார-பேராசிரியர் ஒருவர் பிரதமராக இருப்பது நல்லது தானே என ஒருவர் கேட்டபோது, அதை அமைதியாக ஆமோதித்தார் மன்மோகன்.