ஆந்திராவுடன் இணைக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது மக்கள் தாக்குதல்
கிருஷ்ணகிரி: ஆந்திராவுடன் கிருஷ்ணகிரியை இணைக்கக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் அல்லது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு மொழியை 2-வது ஆட்சி மொழியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தெலுங்கு சாகித்ய பரிசத், தெலுங்கு எழுத்தாளர்கள் சங்கம், கண்டசாலா நண்பர்கள் மன்றம், என்.டி.ஆர்.கலாபீடம் மற்றும் சிரஞ்சீவி, பாலய்யா, ஜுனியர் என்.டி.ஆர். ஆகிய ரசிகர் நற்பணி மன்றங்கள் சார்பில் நேற்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் முறையாக அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் மைக் மூலம் கோஷம் எழுப்பினார்கள். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு, மைக் செட்டை அகற்றுமாறு தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் கூடிய பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் வாழ்க என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பொதுமக்கள் திரண்டு சென்று உண்ணாவிரதப் பந்தலைப் பிரிக்க ஆரம்பித்தனர். அதற்கு உண்ணாவிரதம் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவர்களை சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர். பதிலுக்கு அவர்களும் தாக்க அங்கு பெரும் மோதல் மூண்டது.
போலீஸார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் விலக்கி விட்டு இரு தரப்பையும் சேர்ந்த 125 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கல்யாண மண்டபம் ஒன்றுக்கு கொண்டு சென்று தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் போலீஸார் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications