வங்கி வட்டியை உயர்த்துகிறது ரிசர்வ் வங்கி!
டெல்லி: நடுத்தர மக்கள், ஏவைகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு பெருகி வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இந்தத் தகவலை பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
மொத்த விலைக் குறியீட்டெண் முறைப்படி பொதுவான பணவீக்கத்தை இதுவரை கணித்து வந்தது மத்திய அரசு. இதனால் உண்மையான விலை உயர்வு குறித்த தகவல்கள் வெளிவராமல் இருந்தன. நாட்டில் தாறுமாறான பணவீக்கம் இருந்தாலும், குறியீட்டெண்ணில் அது எதிரொலிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்க முறையை இப்போது கணக்கில் எடுத்துக் கொள்ள மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது.
அதன்பிறகுதான் விலைவாசி உயர்வின் நிஜ முகம் அரசுக்குத் தெரிய வந்தது.
இந்த வார நிலவரப்படி உணவுப் பொருள் பணவீக்கத்தின் அளவு 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயர்வாகும்.
இதைக் கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன், "இந்த மாதம், உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை என்றால், பின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, வட்டி வீதத்தை அதிகரிப்பது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்க வேண்டிய குறிப்பிட்ட ரொக்க கையிருப்பு வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியும் நிதியியல் கொள்கையில் சில அவசர மாறுதல்களைச் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவிகிது. நான்கு தினங்களுக்கு முன் (டிசம்பர் 18) நிதியமைச்சரைச் சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட புதிய நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் 29-ம் தேதி வெளியிடுகிறது.