தொடரும் வன்முறை: ரோசய்யா டென்ஷன்-எச்சரிக்கை!
2 மாநிலமாக பிரிக்கக் கூடாது என்ற போராட்டத்தின் விளைவாக தற்போது ஆந்திர மாநிலம் பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டுக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் போராட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம், பஸ்கள் எரிப்பு, அமளி துமளி, கடையடைப்பு, ஸ்டிரைக் என ஆந்திராவே ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது.
கடந்த 2 வாரங்களாக ஆந்திராவின் கடலோர பகுதிகள் மற்றும் ராயலசீமா பகுதிகளில் பஸ் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஆந்திர மாநிலத்தின் பொருளாதாரமே சீர்குலையும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டுள்ளது.
மாணவர்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் ஆந்திராவை பிரிக்கக் கூடாது, தெலுங்கானா அமைக்கக் கூடாது என்று போராடி
வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தால், கர்னூல், விஜயவாடா, திருப்பதி, அனந்தப்பூர், நெல்லூர், விசாகபப்ட்டனம் ஆகிய நகரங்கள் களையிழந்து போய் காணப்படுகின்றன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பஸ்களை ஓட்டினால் ஒன்று அடித்து உடைக்கிறார்கள் அல்லது எரிக்கிறார்கள். எனவே பஸ்கள் ஓடவில்லை.
இந்த நிலையில் போராட்டம் சற்றும் குறையாமல் மேலும் வலுவடைய ஆரம்பித்துள்ளது. தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்ட சிரஞ்சீவி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாத்திரை கிளம்பியுள்ளார்.
அதேபோல தெலுங்கானா அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சந்திரசேகர ராவும் பஸ் யாத்திரையைத் தொடங்கவுள்ளார்.
இதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் ஆங்காங்கு போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
திருப்பதி கோவிலுக்கு வரும் கூட்டம் முற்றிலும் குறைந்து போய் விட்டது. வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் பெருமளவில் குறைந்து விட்டனர். இதனால் திருப்பதி வெறிச்சோடிக் கிடக்கிறது.
நிலைமை மோசமாகி வருவதால், கோபமடைந்துள்ள முதல்வர் ரோசய்யா, போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ஆனால் அவரது வாய்ஸ் அவருக்கே சரியாக கேட்காத அளவுக்கு பலவீனமான முதல்வராக ரோசய்யா இருப்பதால் அவரது எச்சரிக்கையை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
ராஜகோபாலுக்கு 'ஜாண்டிஸ்'...
இதற்கிடையே, விஜயவாடா மருத்துவமனையிலிருந்து எஸ்கேப் ஆகி, ஹைதராபாத்துக்கு ஓடி வந்து, அங்குள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்குள் நுழைந்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவராகவே போய் படுத்துக் கொண்ட விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபாலுக்கு மஞ்சள் காமாலை வந்து விட்டதாம்.
இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனராம்.
இதில் விசேஷம் என்னவென்றால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவுக்கு கொடுக்கப்பட்ட அதே அவசர சிகிச்சைப் பிரிவு அறையில்தான் ராஜகோபாலையும் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்களாம்.
சிரஞ்சீவியை பார்க்க ரயில் கண்ணாடிகள் உடைப்பு...
இதற்கிடையே, பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி நேற்று அனந்தப்பூர் சென்றார். அங்கு போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர் உண்ணாவிரதம் இருந்த தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. பரிட்டால சுனிதாவை சந்தித்தார்.
பின்னர் அவர் ராஜ முந்திரி செல்வதற்காக பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மாலை புறப்பட்டார். அந்த ரயில் டோன் ரெயில் நிலையத்திற்கு இரவு 10.15 மணிக்கு வந்தது.
அப்போது அவரைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந் தனர். அவர்கள் சிரஞ்சீவியை வெளியே வந்து பேசுமாறு கூறினார்கள். வெளியே போதிய வெளிச்சம் இல்லாததால் அவர் வெளியே வர மறுத்தார்.
ஆனால் வெறியில் இருந்த தொண்டர்கள் அவர் இருந்த எஸ்-1 ஏ.சி. ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். பின்னர் ஜன்னல் வழியாக சிரஞ்சீவி எங்கு இருக்கிறார் என்று தேடிப் பார்த்தனர். ஆனால் சிரஞ்சீவி சிக்கவில்லை.
நிலைமை மோசமானதை தொடர்ந்து ஏராளமான போலீசார் வரவழைக் கப்பட்டனர். அவர்கள் தொண்டர்களை சமாதானம் செய்தனர். பின்னர் சிரஞ்சீவியை வெளியே அழைத்து வந்தனர்.
அவரைப் பார்த்ததும் தொண்டர்கள் தலைவா என்று கோஷமிட்டனர். பதிலுக்கு அவர்களிடம் ஜெய் ஆந்திரா என்று கோஷமிடும்படி கூறினார் சிரஞ்சீவி.
பின்னர் பேசுகையில், என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை நினைத்து பெருமைப்படுகிறேன். இதற்காக பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஏசி பெட்டியின் கண்ணாடிகளை ரசிகர்கள் உடைத்து துவம்சம் செய்து விட்டதால் சிரஞ்சீவியை வேறு
பெட்டிக்குக் கூட்டிச் சென்று அமர வைத்தனர்.
இந்த அமளியால் ரயில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாக சென்றது.
எம்.எல்.ஏ. கவலைக்கிடம்..
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கூடாது என வற்புறுத்தி விஜயவாடாவில் உண்ணாவிரதம் இருந்து வரும் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. உமா மகேசுவர ராவின் உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.
கடந்த 10 நாட்களாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவரை குண்டூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கும் அவர் சிகிச்சையை ஏற்க மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல் நிலை இன்னும் மோசமாகி விட்டதாம்.
கவலைக்கிடமாக இருக்கிறாராம்.