வந்தவாசியில் 8 ஓட்டுகள் மாயம்-எங்கே போச்சு?
வந்தவாசி: வந்தவாசி தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பதிவான ஓட்டுக்களைக் குறிப்பிட்டபோது, எட்டு ஓட்டுகள் குறைவாக கூறப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வந்தவாசி இடைத்தேர்தலில் கமலக்கண்ணன் (தி.மு.க), முனுசாமி (அ.தி.மு.க.,) ஜனார்த்தனம் (தே.மு.தி.க.,) உள்பட 14 பேர் களத்தில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். வந்தவாசி தொகுதியில் 85 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது.
217 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த வந்தவாசியில் மொத்தம் 1,58,210 வாக்காளர்கள். இதில் 1,32,758 பேர் வாக்களித்தனர். இன்று காலை சரியாக 8 மணிக்கு ஒட்டு எண்ணிக்கை ஆரம்பமானது. இதில் தபால் ஓட்டுகள் எதுவும் பதிவாகவில்லை. 49 (ஓ) விதிமுறையை 21 பேர் பயன்படுத்தியிருந்தனர்.
வந்தவாசியில் மொத்தம் 1,58,210 வாக்காளர்கள். இதில் 1,32,758 பேர் வாக்களித்தனர். ஆனால் இன்று 16 கட்ட ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டவுடன் 1,32,750 வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள 8 ஓட்டு எங்கே போனது என்று வந்தவாசி தேர்தல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.