அதிமுக ஓட்டு வங்கியில் ஓட்டை-51.6% சரிவு!
திருச்செந்தூரி்ல் அதிமுகவுக்கு மாபெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் 51.60 சதவீத வாக்குகளை அந்தக் கட்சி இழந்துள்ளது.
திருச்செந்தூர் சட்டசபைக்கு 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் 58,600 வாக்குகள் பெற்றிருந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெயசீலன் 44,684 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் கணேசன் 3,756 வாக்குகளும் பெற்றனர்.
இதன்மூலம் அனிதா ராதாகிருஷ்ணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெயசீலனை 13,916 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தற்போது இடைத் தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கிய அனிதா ராதாகிருஷ்ணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை 46,861 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் இதுவரை எந்த வேட்பாளரும் இந்த அளவுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதே இல்லை.
அதேபோல கடந்த தேர்தலை விட தற்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 16,623 ஓட்டுக்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன.
அதே நேரத்தில் 2006ம் தேர்தோடு ஒப்பிடுகையில் அதிமுகவின் ஓட்டு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 58,600 வாக்குகள் வாங்கிய அதிமுக இம்முறை வெறும் 28,362 வாக்குகள் தான் பெற்றுள்ளது.
இதன் மூலம் அதிமுக 30,238 வாக்குகளை இழந்துள்ளது. இது கிட்டத்தட்ட 51.60 சதவீத சரிவாகும். இந்த வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கே சென்றுள்ளன.
வந்தவாசியிலும் சரிவு:
வந்தவாசி தொகுதியில் கடந்த முறை திமுக வேட்பாளர் ஜெயராமன் 65,762 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் சக்ரபாணி 42,974 வாக்குகள் பெற்றார்.
இதன்மூலம் அதிமுக வேட்பாளரை திமுக வேட்பாளர் 22,788 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயராமனின் மகன் கமலக்கண்ணன் தந்தையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முனுசாமியை தோற்கடித்துள்ளார்.
கமலக்கண்ணன் 78,827 வாக்குகளும், முனுசாமி 40,810 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம் வந்தவாசியிலும் அதிமுகவுக்கு சுமார் 2,100 வாக்குகள் குறைந்துள்ளன.
அதே நேரத்தில் இப் பகுதியின் பெரும்பாலான பாமக வாக்குகள் திமுகவுக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது.