ராவ் பாணியில் 30 வருடம் கூட உண்ணாவிரதம் இருக்கலாம்-காங். எம்.பி
ஹைதராபாத்: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் இருந்தது உண்மையான உண்ணாவிரதம் இல்லை. அவர் மருத்துவமனையில் இருந்த 11 நாட்களும் அவரது உடலில் திரவ உணவுப் பொருட்களை செலுத்தியுள்ளனர். இப்படி செய்தால் 30 வருடம் கூட உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம் என்று என்னிடம் டாக்டர்கள் தெரிவித்தனர் என்று கூறியுள்ளார், ராவ் 'பாணியில்' உண்ணாவிரதம் மேற்கொண்டு இன்று முடித்துக் கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால்.
ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று கோரி முதலில் குரல் கொடுத்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து டெல்லியிலிருந்து வந்தவர் காங்கிரஸ் எம்.பி. லகடபதி ராஜகோபால்.
அதன் பின்னர் விஜயவாடா திரும்பிய அவர் அங்கு கடந்த 14ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
5 நாட்கள் கழித்து போலீசார் கைது செய்து விஜயவாடா மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து எஸ்கேப் ஆனார் ராஜகோபால். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த அவர், அவராகவே அவசர சிகிச்சைப் பிரிவில் போய் சேர்த்துக் கொண்டார்.
அங்கும் அவர் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், தெலுங்கானா பிரச்சனையில் அனைவரும் ஏற்கும் சுமூக தீர்வு அறிவிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததைத் தொடர்ந்து தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார் ராஜகோபால்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் ராஜகோபால் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவர் எந்த உணவையும் உட்கொள்ளாமல் இருந்தார்.
ஆனால் சந்திரசேகர ராவ் சமீபத்தில் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அந்த 11 நாட்களும் அவருக்கு ஊசி மூலம் திரவ உணவு செலுத்தப்பட்டது. இந்த உண்ணாவிரதத்தை 30 ஆண்டுகள் வரை கூட இருக்கலாம் என்று டாக்டர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதுதான் சந்திரசேகர ராவ் போலி உண்ணாவிரதம் இருந்ததை தெரிந்து கொண்டேன்.
உண்மையாக சொல்ல வேண்டுமானால் நான் மகாத்மா காந்தி பாணியில் சிலநாட்கள் தான் உண்ணாவிரதம் இருந்தேன். பல நாட்கள் சந்திரசேகர ராவ் பாணியில் போலி உண்ணாவிரதம் இருந்தேன்.
இந்த உண்ணாவிரதம் இருந்தபோது உடலில் எந்தவித சோர்வும் ஏற்படவில்லை. இதற்கு டாக்டர்கள் டோட்டல் பேரன்டல் நியூட்ரிசியன் என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்துகிறார்கள். இந்த மருந்து செலுத்தப்பட்டால் திட உணவு சாப்பிட தேவை இல்லை. சந்திரசேகர ராவுக்கு இந்த மருந்துதான் செலுத்தப்பட்டது.
எனவே இனி யாராவது உண்ணாவிரதம் போராட்டத்தை ஆஸ்பத்திரியில் நடத்தினால் மக்கள் நம்ப வேண்டாம். அதை நம்பி தீக்குளிப்பது வெட்கக்கேடான ஒன்று.
நான் மருத்துவமனையி்ல் இருந்து தப்பியதற்காக 5 போலீஸ் அதிகாரிகளை மாநில அரசு சஸ்பென்டு செய்துள்ளது. இது தவறான நடவடிக்கையாகும் என்றார் ராஜகோபால்.