திருச்செந்தூரை அதிமுகவிடமிருந்து கைப்பற்றியது திமுக - அனிதா ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி

திருச்செந்தூர் தொகுதிக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் அம்மன் நாராயணன், தேமுதிக சார்பில் கோமதி கணேசன் உள்பட 25 பேர் போட்டியிட்டனர்.
மொத்தம் 196 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளர் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 150. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 951 பேர் வாக்களித்தனர். மொத்தம் 79.17 சதவீத வாக்குகள் பதிவாயின. ஆண்களை விட 8 ஆயிரத்து 249 பெண்கள் வாக்களித்தனர்.
இந்த தொகுதியில் வாக்கு பதிவு முடிந்து 434 மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு திருசெந்தூர் ஆதித்தனர் கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. 14 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் திமுக வேட்பாளர் அனிதா ராதா கிருஷ்ணன், தமக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை விட 46,861 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அனிதா 75,223 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணன் 28,362 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் கணேசன் வெறும் 4,186 வாக்குகளும் பெற்றனர்.
திருச்செந்தூர் தொகுதியை அதிமுகவிடமிருந்து திமுக பறித்துள்ளது. தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது.
மேலும், கடந்த தேர்தலில் வென்றதை விட இந்த முறை கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் அனிதா வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
3வது முறையாக வெற்றி..
அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூரில் வெற்றி பெறுவது இது மூன்றாவது முறையாகும்.
2001, 2006 ஆகிய தேர்தல்களில் இவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். தற்போது நடந்த இடைத் தேர்தலில் திமுக சார்பாக வென்றுள்ளார்.
இவர் திமுகவுக்குத் தாவியதால்தான் இங்கு தேர்தலே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணும் மையத்தில், 1 எஸ்பி, 5 டிஎஸ்பிகள், 10 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள், 120 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், 200க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications