ஸ்ரீரங்கம் ஜீயர் மட கோயிலுக்குள் பூட்டை உடைத்து புகுந்த பக்தர்கள்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பூட்டை உடைத்து பக்தர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ளது பலஹரி புருஷோத்தம ஜீயர் மடம். இந்த மடத்தின் ஜீயர், லட்சுமணராமானுஜம் ஜீயர். இங்கு சமையல் வேலை பார்த்தவர் பத்ரி. இவர், மனைவி கோதாராணியுடன் வசிக்கிறார்.
இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. கோவிந்த ராமானுஜ தாசா என்பவர், சீனிவாச பெருமாள் கோயிலை திறக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். கோயிலை திறந்துவிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவிட்டது.
ஆனாலும், ஸ்ரீரங்கம் போலீஸார் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுத்துள்ளனர். இதனால், பலஹரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்து சீடர்கள், சங்கத் தலைவர் கோவிந்த ராமானுஜ தாசா, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னிதியை திறக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.
இதனையடுத்து, திருச்சி டி.ஆர்.ஓ அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலை திறக்க பக்தர்கள் பாட்டுப்பாடி, ஆடியும் மடத்தை முற்றுகையிட்டு மடத்தின் பூட்டை உடைத்து திறந்தனர்.