மிக்சி-கிரைண்டருக்கு விலைபோன ஓட்டு-வைகோ
பாளை: இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சியின் அமைச்சர்கள் பணம், மிக்சி, கிரைண்டர் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கிவிட்டனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
பாளை புதுப்பேட்டை பகுதியில் இன்று கட்சியின் கொடியேற்று விழாவுக்கு வந்த வைகோ நிருபர்களிடம் பேட்டி அளிக்கையில்,
முல்லை பெரியாறு அணைக்கு அருகே கேரள அரசு புதிய அணை கட்டும் பணியை தொடங்கி உள்ளது. இதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசும் தடுத்து நிறுத்த முயற்சி செய்யவில்லை. இதன்மூலம் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது.
புதிய அணை கட்டப்பட்டு விட்டால் தமிழக பகுதியில் உள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காது. 65 லட்சம் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படும்.
இதை கண்டித்து வருகிற 29ம் தேதி கம்பத்தில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மதிமுக சார்பாக வாகன மறியல் போராட்டம் நடைபெறும்.
இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்து மிகப்பெரிய இனப் படுகொலை நடக்க உதவியுள்ளது. இலங்கை பிரச்சனையை கருணாநிதி கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.
இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சியின் அமைச்சர்கள் பணம், மிக்சி, கிரைண்டர் என்று கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கி உள்ளனர். இது வருந்தத்தக்கது. நல்ல ஜனநாயகம் அல்ல என்றார்.