மிஸ்ரா அறிக்கையால் விபரீத விளைவு-பாஜக
சென்னை: ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை அமல்படுத்தப்பட்டால் நாட்டில் மதரீதியான பிளவு ஏற்படும். அதனால் அந்த அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடஒதுக்கீடு குறித்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை வெளியாகி உள்ளது. இஸ்லாமிய சமூகத்திற்கு 10 சதவீதமும், கிறிஸ்துவ சமூகத்திற்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்து மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள், மதம் மாறுவதற்கு முன்பாக எந்த சாதியில் இருந்தார்களோ, அந்த சாதிக்கு வழங்கப்படும் சலுகைக்கு சமமான சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் மிஸ்ரா, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இது தானாக தந்த அறிக்கை அல்ல. இஸ்லாமிய, கிறிஸ்துவ மத குருமார்கள் இந்த கோரிக்கைக்காக போராட்டமே நடத்தியிருக்கிறார்கள்.
இந்து சமுதாயத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று, நீ இந்துவாக இருப்பதால்தான் சாதி கொடுமை நீடிக்கிறது. என் மதத்திற்கு வந்துவிட்டால் சாதி ஒழியும், சமத்துவம் நிலவும்' என்று ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றினார்கள்.
இப்போதோ மதம் மாறிய பின்பும் சாதி நீடிக்கிறது என்றும், சாதி வேற்றுமை நீடிக்கிறது என்றும் சொல்லி சலுகை கேட்கிறார்கள். அப்படியானால் அப்போது சொன்னது உண்மையா அல்லது இப்போது சொல்வது உண்மையா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
மதம் மாறிய பின்பும் சாதி கொடுமை நீடிக்கிறது என்று சொன்னால் அதற்கு பரிகாரம், சலுகைகளை விஸ்தரிப்பது அல்ல. மதம் மாறிவிட்டவர்கள் தவறை உணர்ந்து மீண்டும் தாய் மதத்துக்கு திரும்புவதே.
ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும். அது அமல்படுத்தப்பட்டால் நாட்டில் மத ரீதியிலான பிளவை உண்டாக்கி விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications