எதிர்பார்த்ததைவிட பெரிய வெற்றி: ஸ்டாலின்
சென்னை:
திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத் தேர்தலில் திமுகவுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிப் பேசிய ஸ்டாலின்,
திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் தி.மு.க. பெற்றுள்ள வெற்றி கலைஞரின் சாதனைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. கலைஞர் ஆட்சியின் திட்டங்களுக்கு மகுடம் சூட்டும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது.
இந்த வெற்றி எதிர்பார்த்தது தான். ஆனால், எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் பெற்று அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இது திமுக கூட்டணிக்கும், மக்களுக்கு திமுக அரசு அறிவித்த நல்ல திட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி.
இந்த வெற்றி எங்களை உற்சாகப்படுத்தும் வகையில், எங்கள் பணிக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது. திமுக ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும் மக்களிடம் முழுமையாக சென்றடைந்து இருப்பதையே இந்த வெற்றி எடுத்துக் காட்டுகிறது.
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி வாக்காளர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வெற்றியை அடுத்து இன்னும் விழிப்போடு மக்களுக்கு பணியாற்றுவோம் என்றார்.
இது குறித்து உணவுத்துறை அமைச்சர் வேலு கூறுகையில்,
வந்தவாசி பல தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால் 38,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எதிர்பாராததுதான் என்றார்.