சொன்னதை செய்தோம்: 2011 தேர்தலிலும் வெல்வோம்-அழகிரி
மதுரை: திருச்செந்தூர் இடைத் தேர்தலில் 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன். திமுக கொடுத்த வாக்குறுதிகளை எப்போதும் காப்பாற்றும். இப்போதும் சொன்னதை விட கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது என்று மத்திய அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், திமுக வாக்குறுதிகளைக் கொடுத்தால் அதை நி்ச்சயம் நிறைவேற்றும். திருச்செந்தூரில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தோம்.
இப்போது அதை விட கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
திமுக அரசின் சாதனைத் திட்டங்களால் மக்கள் மன நிறைவுடன் உள்ளனர். குறிப்பாக கலைஞர் உயிர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை என மக்கள் மன நிறைவுடன் உள்ளனர்.
இந்தத் தேர்தல் முடிவைப் பார்க்கும்போது பென்னாகரம் தொகுதியில் அதிமுக போட்டியிடுமா என்பதே சந்தேகம்தான்.
திமுகவின் இந்த வெற்றி வரும் 2011 சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும் தொடரும். மக்களுக்காக இன்னும் சிறப்பாக பணியாற்றுவோம் என்றார் அழகிரி.
அழகிரியின் வியூகம்தான் காரணம்: அனிதா
அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையி்ல், முதல்வர் கருணாநிதியின் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றுள்ளன. இதுவும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வியூகமும் தான் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம் என்றார்.
அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்...
திருச்செந்தூர் வெற்றிச் செய்தி வருவதற்கு முன்பே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத் தொடங்கினர்.
வெற்றிச் செய்தி கிடைத்ததும் கொண்டாட்டம் இரட்டிப்பானது.