சுகோய் பயணத்தைத் தொடர்ந்து போர்க் கப்பலில் பயணித்த பிரதீபா பாட்டீல்

சமீபத்தில் சுகோய் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார் பிரதீபா பாட்டீல். இந்த நிலையில் நேற்று அவர் ஐஎன்எஸ் விராத் போர்க் கப்பலுக்கு வந்தார்.
அவருக்கு கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் விராத் கப்பல் குறித்து பிரதீபா பாட்டீலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போர்க் கப்பலில் ஹெலிகாப்டர் சாகசங்களைப் பார்த்து மகிழ்ந்தார் பிரதீபா பாட்டீல்.
பின்னர் மாலுமிகள், அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசினார். அவர்களிடையே பிரதீபா பேசுகையில், மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் கடற்படையும், அதன் கூட்டுப் படைகளும் எடுத்து வரும் நடவடிக்கைள் நல்ல விளைவுகளை நாட்டுக்குத் தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் தீங்கிழைக்க முடியும் என்பதை நமக்கு காலம் பூராவும் நினைவுபடுத்தும் சம்பவம் தான் மும்பைத் தாக்குதல்.
இந்திய கடற்படையும், அதன் கூட்டுப் படைகளும் மேற்கொண்டு வரும் தீவிர கண்காணிப்புகள், ரோந்துகள் மகிழ்ச்சி தருகிறது, நம்பிக்கையைத் தருகிறது. இதன் மூலம் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்.
21வது நூற்றாண்டின் மாறி வரும் தேவைகளுக்கேற்ப கடற்படையை வலிமைப்படுத்தவும், நவீனமாக்கவும் மத்திய அரசு பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் இந்தியக் கடற்படை தொடங்கி வைத்த அரிஹாந்த் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் மிகப் பெரிய மைல் கல்லாகும். இதேபோல மேலும் பல கப்பல்கள், நீர்மூழ்கிகள், விமானக் கட்டுமானங்கள் உள்ளிட்டவை கடற்படையில் சேர்க்கப்பட்டு வருவதாக நான் அறிந்தேன். இதன் மூலம் இந்தியக் கடற்படை மேலும் வலுவுள்ளதாக மாறும் என்றார் குடியரசுத் தலைவர்.












Click it and Unblock the Notifications