தெலுங்கானாவில் பெரும் பதட்டம்- தமிழக லாரிகள் அனைத்தும் நிறுத்தம்
இதனால் ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை பகுதிகளில் ஜவுளி, மஞ்சள், புளி ஆகியவை அனுப்பும் பணி பெரும் பாதிப்பையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் இப்போதைக்குக் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்து விட்டது. இதனால் அங்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், மாணவர்களும் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று முதல் 2 நாட்களுக்குப் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தெலுங்கானா முழுவதும் பெரும் பதட்டமும், வன்முறையும் நிலவுகிறது.
ப.சிதம்பரம் நேற்று தெலுங்கானா குறித்த அறிவிப்பை வெளியிட்டதுமே அங்கு போராட்டம் வெடித்து விட்டது.
இதையடுத்து தமிழகத்திலிருந்து ஆந்திரா மற்றும் ஆந்திரா வழியாக பிற மாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சரக்கு லாரிகள் செல்வது நேற்று இரவு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2500 லாரிகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிப் பொருட்கள், மஞ்சள், புளி ஆகியவற்றை அனுப்புவது கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. பெரும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஆந்திராவில் வன்முறை நீடித்து வருவதால், ஏற்கனவே வர்த்தகர்கள் பாதிப்பிலும், நஷ்டத்திலும் உழன்று வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளதால் மறுபடியும் சரக்கு லாரிப் போக்குவரத்து பாதிப்பை சந்தித்துள்ளது.