திருசெந்தூரில் அனிதா 'ரெக்கார்ட் பிரேக்'!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் தொகுதியில், இதுவரை யாருமே 3 முறை வெற்றி பெற்றதில்லை. அந்த சாதனையை முதல் முறையாக அனிதா ராதாகிருஷ்ணன் படைத்துள்ளார். அதுவும் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் சார்பாகவும் இந்தத் தொகுதியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்னொரு சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து ஆகும். இவர் 19.9.1952ல் பிறந்தார். பியூசி வரை படித்துள்ளார். மதுரையில் பாத்திர தொழில், கல்குவாரி நடத்தி வருகிறார்.
இவரது தந்தை ராமமூர்த்தி நாடார், தாய் பசுங்கிளி அம்மாள். மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஷ்வரன்.
கடந்த 2001ம் ஆண்டு முதன்முறையாக அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்று கால்நடைத்துறை, நகர்ப்புற வீட்டு வசதி துறை அமைச்சராக பணியாற்றினார்.
2006ம் ஆண்டு மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அதன் பின்னர் கட்சி தலைமை இவரை புறக்கணித்ததால் முதல்வர் கருணாநிதி தலைமையில் தி்முகவில் இணைந்து பதவியை ராஜினமா செய்தார்.
திருச்செந்தூர் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் சார்பில் செல்வராஜ், திமுக சார்பில் எட்மண்ட், அதிமுக சார்பில் அமிர்தராஜ் ஆகியோர் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதன்முறையாக அனிதா ராதாகிருஷ்ணன் 3வது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
திமுகவின் தென்மண்டல செயலாளரும், மத்திய அமைச்சருமான அழகிரி சொன்னது போல் இத்தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுகவை சாதனை படைக்க வைத்துள்ளார்.
அதி்முகவுக்கும், அனிதாவுக்கும் நடக்கும் தேர்தல் என்று கூறப்பட்டாலும் அழகிரிக்கும் அதிமுகவுக்கும் நடந்த தேர்தலாகதான் இதனை கருத முடிகிறது.
அதேசமயம், அனிதாவின் வெற்றிக்குப் பின்னால், அழகிரியின் வெற்றி வியூகம் மறைந்திருப்பதையும் உணர முடிகிறது.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் முரட்டு பக்தர் என திமுகவினரால் வர்ணிக்கப்படும் மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் கன்ட்ரோலில்தான் இருப்பது வழக்கம். இவர் தீவிர ஸ்டாலின் பக்தரும் கூட.
ஒரு காலத்தில் அழகிரியைக் கண்டுகொள்ளாமலேயே இருந்து வந்தவரும் கூட. ஆனால் இப்போது டோட்டல் தென் மண்டலமும் அழகிரியின் கையசைவுக்கும், வியூக வளைப்புக்கும் தாளம் போடும் நிலைமை வந்துள்ளது.
கடந்த தேர்தல் நிலவரம்...
திருச்செந்தூர் தொகுதியில் 2006ம் ஆண்டு தேர்தலில் அதி்முக, திமுக, தேமுதிக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் நிலவரம்
அனிதா ராதாகிருஷ்ணன் (அதி்முக) - 58,600
ஜெயசீலன் (திமுக) - 44,864
கணேசன் (தேமுதிக) - 3756
கண்ணன் (பிஜேபி) - 1398
பரிசமுத்து (பர்வார்டு பிளாக்)-430
2009 இடைத் தேர்தல் முடிவு
அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) - 75,223
அம்மன் நாராயணன் (அதிமுக)- 28,362
கணேசன் (தேமுதிக) - 4186
கடந்த தேர்தலில் அதி்முக சார்பில் போட்டியிட்டு 13 ஆயிரத்து 916 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அனிதா, இம்முறை தி்முக சார்பில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை விட 46 ஆயிரத்து 861 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
எடுபடாமல் போன தலைவர்கள்
திருச்செந்தூர் இடைத் தேர்தலில் திமுகவைத் தவிர பிற கட்சிகளின் தலைவர்களின் குரல்கள் எடுபடாமல் போனது.
திருச்செந்தூர் சட்டசபை இடைத் தேர்தலில் கடு்மையான மும்முனை போட்டி நிலவியது. இதில் திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகள் மட்டுமே நேருக்கு நேர் நின்றன.
பாமக தேர்தலில் போட்டியிடாமல் தங்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இத்தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடாமல் 49 ஓ படிவத்தை நிரப்பி அளியுங்கள் என்று கூறியிருந்தது. அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. திருச்செந்தூரில் வெறும் 17 பேர் மட்டுமே ஓ போட்டனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல மாற்றம் ஏற்படுத்தப் போகும் தேர்தல் என்றார். ஆனால் விஜயகாந்த்துக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தேமுதிக வேட்பாளர் டெபாசிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
தொண்டை வறள விஜயகாந்த் எவ்வளவு பேசினாலும், நிதர்சனங்களை எடுத்துக் கூறினாலும் மக்கள் அதைக் கவனிக்காமல் இருக்கிறார்களே என்று தேமுதிகவினர் வருந்துகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் தேமுதிகவின் வளர்ச்சியை பார்த்து 430 வாக்காளர்கள் மட்டுமே கூடுதலாக வாக்களித்துள்ளனர்.
கடந்த 2006 தேர்தலில் 58 ஆயிரத்து 600 வாக்குகள் பெற்ற அதிமுக இத்தேர்தலில் வெறும் 28 ஆயிரத்து 363 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
கடந்த 2006 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இம்முறை 30 ஆயிரத்து 238 வாக்குகள் குறைவாகவும் இக்கட்சி பெற்று இம்மாவட்டத்தில் சரிவை சந்தித்துள்ளது.
1977,80,83,84,91,2001,2006 ஆகிய 7 தேர்தல்களில் வெறறி பெற்று வந்த இக்கட்சி இம்முறை தோல்வியை சந்தித்துள்ளது.
திருப்புமுனையைத் தாருங்கள் என்று ஜெயலலிதா கெஞ்சாத குறையாக பிரசாரம் செய்தார். ஆனால் திருச்செந்தூரின் அருள் ஜெயலலிதாவுக்குக் கிடைக்காமல் போய் விட்டது.
திமுக முடித்த வனவாசம் ..
மாறாக, உண்மையில் இந்தத் தேர்தல் திமுகவுக்குத்தான் திருப்புமுனையாகும்.
1967, 71, 89,96 ஆகிய 4 தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுக 13 ஆண்டு கழித்து மீண்டும் தற்போது இத்தொகுதியை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே திருச்செந்தூர் மக்கள் திமுகவுக்குத்தான் திருப்பத்தைத் தந்துள்ளனர் என்று சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications