கரூரில் 300 மாட்டுவண்டி உரிமையாளர்கள் கைது
கரூர்: மணல் வண்டிக்கு நடை சீட்டு ரூபாயை குறைக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 300 மாட்டு வண்டி உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் சுமார் 2500 மாட்டு வண்டிகள் மூலம் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் தினசரி மணல் எடுத்து கட்டுமானப் பணிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
கடந்த காலங்களில் ஆற்றில் மணல் அள்ள ஒரு மாட்டு வண்டிக்கு ஒரு நாளைக்கு ரூ.40 மட்டும் வசூல் செய்து வந்தனர். ஆனால் தற்போது வண்டிக்கு ஒரு நடைக்கு மட்டுமே ரூ.40 என நிர்ணயம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விதிமுறையை மாற்றி பழைய முறையே தொடர வேண்டும் என்று மாட்டு வண்டி உரிமையாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரியை சந்தித்து மனு அளித்தனர்.
மேலும் டிசம்பர் 24ம் தேதிக்குள் முடிவை அறிவிக்காவிட்டால் மாவட்ட கலெக்டர் அலுவகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து இருந்தனர்.
இதுகுறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நோக்கி சுமார் 300 மாட்டு வண்டிகளில் ஆர்பாட்டக்காரர்கள் அணிவகுத்து முற்றுகையிட சென்றனர்.
போலீசார் மாட்டு வண்டிகளை வழிமறித்து அதன் உரிமையாளர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.