எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது - விஜயகாந்த்
சென்னை: எது நடக்கக் கூடாது என்று அனைவரும் நினைத்திருந்தோமோ, அது நடந்து விட்டது. இந்த அரசியல் தோல்வி, ஏழைகளின் தோல்வி, ஜனநாயகத்தின் தோல்வி. தர்மத்தின் தோல்வியாகும். இதனால் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்படும். ஆகவே, தமிழ்நாட்டு மக்கள் விழிப்புடன் செயல்பட்டு விரைவில் இதற்கு மாற்றம் காண வேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
எது நடக்கக் கூடாதோ அது நடந்துள்ளது. திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தல்களின் முடிவு, ஜனநாயக முறைக்கு தீமை விளைவிப்பதாகும். இந்த தற்காலிக வெற்றி ஆளுங்கட்சியினருக்கு இன்று மகிழ்ச்சி தரலாம். ஆனால் இது நாளாவட்டத்தில் இந்த கட்சியினருக்கே ஆபத்தாகி விடும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். ஏற்கனவே அண்ணா தி.மு.க. இத்தகைய தேர்தல் முறையை கையாண்டு இன்று அதன் பலனை அனுபவிக்கிறது. இதே பாடம் நாளை தி.மு.க.விற்கும் கிடைக்க தவறாது.
வெற்றி, தோல்வி சகஜம் என்று வேதாந்தம் பேசி பயனில்லை. இந்த அரசியல் தோல்வி. ஏழைகளின் தோல்வி, ஜனநாயகத்தின் தோல்வி. தர்மத்தின் தோல்வியாகும். இதனால் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்படும். ஆகவே, தமிழ்நாட்டு மக்கள் விழிப்புடன் செயல்பட்டு விரைவில் இதற்கு மாற்றம் காண வேண்டியது அவசியமாகும்.
இந்த தர்மயுத்தத்தில் எதையும் எதிர்பாராமல் தே.மு.தி.க. தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. இந்த இடைத்தேர்தல் என்னும் தியாகவேள்வியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றும் என் இதயத்தில் நீங்காத இடம் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும். வாக்காளர்களுக்கு தாராளமாக லஞ்சம் கொடுத்ததை ஊடகங்களும், பத்திரிகைகளும் வெளிக் கொண்டு வந்தன. தேர்தல் பார்வையாளர்களும் இதை நன்கு அறிவார்கள். அவற்றை கருத்தில் கொண்டு நேர்மையான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ள தேர்தல் கமிஷன் இந்த இடைத் தேர்தல்களை ரத்து செய்திருக்க வேண்டும்.
அப்பொழுது தான் தேர்தல்களில், ஊழல் பணம் கொடுப்பது தவிர்க்கப்பட்டு நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும். எத்தனை முறை பணம் கொடுத்தாலும் அத்தனை முறையும் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற நிலை உருவாகுமானால் தேர்தல்கள் நேர்மையாக நடைபெற வழி பிறக்கும். தேர்தல் கமிஷன் இனியாவது அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.