பகவானை நண்பனாக நினைத்து தப்பு செய்துட்டேன்-தேவநாதன்
தவறு செய்பவர்கள் பொதுவாக செய்யும் வரை அதை தவறாகவே நினைக்க மாட்டார்கள். செய்து சிக்கிய பின்னர் வேதாந்தியாக மாறி தத்துவமாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.
தேவநாதனும் அப்படித்தான். கடவுள் சிலைக்கு அருகிலேயே அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதன் இப்போது நான் பாவம் செய்து விட்டேன், தப்பு செய்து விட்டேன், கடவுளை நண்பனாக நினைத்து இப்படி நடந்து கொண்டு விட்டேன் என்று புலம்பியுள்ளார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதன், தன்னுடன் உள்ள சக கைதிகளிடம், நான் கோவில் கருவறையில் பகவான் முன்னிலையில் செய்த தவறுக்கு தற்போது தண்டனை அனுபவிக்கிறேன். தனிமையில் வாடுகிறேன்.
பகவானை என் சக நண்பராக கருதியே இதுபோல செய்தேன். ஆனால் பகவான் என்னை தண்டித்து விட்டார் என்று கண்ணீர் விட்டுப் புலம்பினாராம்.
இந்த நிலையில் நேற்று தேவநாதனின் சிறைக் காவல் முடிவடைந்ததால் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அவரை காஞ்சிபுரம் கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர். அப்போது அவரைப் புகைப்படம் எடுக்க பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் முயன்றனர். ஆனால் போலீஸார் அதைத் தடுத்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் போலீஸார், புகைப்படம் எடுக்காமல் புகைப்படக்காரர்களைத் தடுத்து விட்டனர்.
மாஜிஸ்திரேட் காயத்ரி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட தேவநாதனுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.